“நர்ஸூங்க மட்டும் கேட்ட உடனேயே வேலை கொடுக்குறீங்க. நாங்க இத்தனை நாளா தெருல இறங்கி போராடுறோமே உங்க கண்ணுக்கு தெரியவே இல்லையா. சாதி பார்த்து ஒதுக்குறீங்களா? குப்பை அள்ளுறவங்கதானேன்னு குப்பையா தூக்கி போடுறீங்களா?’ என தூய்மைப் பணியாளர்கள் கோஷம் எழுப்பி கொந்தளித்தனர். கிட்டத்தட்ட 35 பேருந்துகளில் பெண் தூய்மைப் பணியாளர்களை குண்டுக்கட்டாக கைது செய்து வெவ்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றனர்

போராட்டத்தை முன்னெடுக்கும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி பேசுகையில், ‘140 நாட்களுக்கும் மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடிக் கொண்டு இருக்கின்றனர். மாநகராட்சி சார்பில் யாருமே பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. செவிலியர்கள் போராடியவுடன் அவர்களுக்கு பணி நிரந்தரம் கொடுக்கிறார்கள். ஆனால், தூய்மைப் பணியாளர்கள் இத்தனை நாட்கள் போராடியும் எந்த தீர்வும் இல்லை.
அடுத்தக்கட்டமாக முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரின் வீட்டை நோக்கி போராட்டத்தை முன்னெடுப்போம்.
எங்களுக்கு தீர்வை கொடுக்கமால் சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்தினால், சென்னையில் குறைந்தபட்சம் 10 இடங்களிலாவது போராட்டம் நடத்துவோம்.
ராம்கி நிறுவனம் சம்பாதிப்பதற்காக ஏழைகளை நசுக்குவதா? பெண்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். வீதியில் இறங்கி போராடி குண்டுக்கட்டாக கைது செய்யப்படுகிறார்கள். இந்த அரசாங்கத்துக்கு வெட்கமாக இல்லையா?’ என்றார்.