தனிப்படை போலீஸார், கணேசனின், மோகன்ராஜ், அவரின் தம்பி ஹரிஹரன் ஆகியோரிடம் கணேசன் மரணம் குறித்து விசாரித்தபோது, பாம்பு கடித்து அப்பா இறந்துவிட்டதாகக் கூறினர். தொடர்ந்து கணேசனை எப்போது பாம்பு கடித்தது என இருவரிடமும் போலீஸார் விசாரித்தபோது எந்த நேரத்தில் கடித்தது என எங்களுக்குத் தெரியாது. நாங்கள் பார்க்கும் போது அவர் வாயில் நுரைதள்ளி மயங்கிய நிலையிலிருந்தார் என்று மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோர் தெரிவித்தனர். பாம்பு எப்படி வீட்டுக்குள் நுழைந்தது என கேட்டது என்று கேட்டதற்கு தெரியாது என பதிலளித்திருக்கிறார்கள். இதையடுத்து கணேசனைக் கடித்த பாம்பை கொன்று விட்டீர்களா? என போலீஸார் கேட்டனர்.
ஆமாம், அப்பாவை கடித்த பாம்பு, அதே அறையில் பதுங்கியிருந்தது. அது வேறு யாரையும் கடித்து விடக்கூடாது என்பதற்காக நாங்கள் இருவரும் அடித்தே கொன்று விட்டோம் என கூறினர். மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோர் கூறிய பதிலை உண்மையென நம்புவதைப் போல போலீஸாரும் இருவரையும் விசாரித்து விட்டு அனுப்பி வைத்தனர்.
ஆனால் இருவரையும் ரகசியமாக தனிப்படை போலீஸார் கண்காணித்தனர். கணேசன் உயிரிழந்த தினத்தில் மோகன்ராஜ், ஹரிகரனின் நடவடிக்கை குறித்தும் அக்கம் பக்கத்தில் விசாரித்து சில தகவல்களை தனிப்படை போலீஸார் சேகரித்தனர்.
காட்டிக்கொடுத்த போன்
போலீஸாரின் இந்த புலனாய்வில் மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோர் கடந்த அக்டோபர் மாதத்தில் பாலாஜி, பிரசாந்த், நவீன்குமார், தினகரன் ஆகியோரிடம் அடிக்கடி பேசி வந்ததும் அவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததும் தெரியவந்தது. இதில் தினகரன், என்பவர் பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வந்த தகவலை தெரிந்த தனிப்படை போலீஸார், அவரிடம் விசாரித்தனர்.
போலீஸாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் கணேசனைக் கொலை செய்ய தினகரன்தான் கட்டுவிரியன் பாம்பை பிடித்து கொடுத்த தகவல் தெரியவந்தது. இதற்காக அவருக்கு பணம் கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து தினகரன் அளித்த தகவலின்படி கூலிப்படையாக செயல்பட்ட பாலாஜி, பிரசாந்த், நவீன்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து இன்ஸ்சூரன்ஸ் பணம், அரசு வேலை ஆசையில் பெற்ற அப்பாவை பாம்பை கடிக்க வைத்து கொலை செய்த குற்றத்துக்காக மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.