முதலில் ராஜினாமா… பின் திமுக! – முடிவெடுத்த ஓபிஎஸ்?

Spread the love

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆளும் கட்சியான தி.மு.க-வில் இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அ.தி.மு.க-வில் நீண்டகாலம் முக்கிய பொறுப்புகளை வகித்த ஓ.பி.எஸ்., 2017-ல் ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதலமைச்சராக பதவியேற்றார். அதற்குப்பின் நிலவிய அதிகாரப் போட்டியில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால், கடந்த 2022-ல் ஓ.பி.எஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, ‘அ.தி.மு.க தொண்டர்கள் மீட்புக் குழு’ என்ற பெயரில் தனிப்பயணம் மேற்கொண்ட அவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் சுயேச்சையாகப் போட்டியிட்டார்.

ஓ.பன்னீர் செல்வம்
ஓ.பன்னீர் செல்வம்

எனினும், எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க-வில் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என்பது உறுதியான நிலையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஏற்கனவே தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க-வில் இணைந்துவிட்டனர்.

இதற்கிடையில், சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓ.பி.எஸ்., தி.மு.க ஆட்சியை பாராட்டினார். தி.மு.க-வில் இணைவது குறித்த கேள்விக்கு “பொறுத்திருந்து பாருங்கள்” என பதிலளித்தது ஊகங்களை அதிகரித்தது.

இந்த நிலையில், இன்று பிற்பகல் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின் கோவை புறப்படுகிறார். அதற்கு முன்பாகவே, ஒ.பன்னீர் செல்வம் இன்று காலை தன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தி.மு.க-வில் இணையவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *