முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னிலையில் இருக்கும் ஆந்திரா தலைநகர் அமராவதி; தமிழ்நாட்டைப் பின்னுக்குத் தள்ளிய ஒடிசா | Andhra Pradesh capital Amaravati leads in attracting investments; Odisha beats Tamil Nadu

Spread the love

ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது ஆந்திராவிற்கு எந்த நகரத்தைத் தலைநகரமாக வைக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு முன்பு முதல்வராக இருந்த ஜெகன் மோகன் இவ்விவகாரத்தில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தார். தற்போது வரை ஆந்திராவிற்கும் ஐதராபாத்தான் தலைநகரமாக உள்ளது.

தற்போது முதல்வராக இருக்கும் சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் புதிய தலைநகரமாக அமராவதியை உருவாக்கி வருகிறார். அமராவதியில் இதற்கான கட்டமைப்பு வசதிகள் முழுவேகத்தில் நடந்து வருகின்றன. மேலும் அமராவதிக்குப் புதிய முதலீடுகளைக் கொண்டு வருவதில் ஆந்திரா அரசு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.

முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நாரா லோகேஷும் சேர்ந்து பன்னாட்டு நிறுவனங்களை அமராவதிக்குக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அவர்களது முயற்சிக்குத் தகுந்த பலன் கிடைத்து இருக்கிறது. கடந்த ஆண்டில் 9 மாதங்களி்ல் இந்தியாவிற்கு வந்த முதலீடுகளில் 25.3 சதவீத முதலீடுகளை அமராவதி ஈர்த்துள்ளதாக பேங்க் ஆஃப் பரோடா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின் படி, எப்போதும் பின்தங்கிய மாநிலமாகப் பார்க்கப்படும் ஒடிசாவும் இம்முறை முதலீடுகளை ஈர்ப்பதில் முந்தி இருக்கிறது. மொத்த முதலீட்டில் 13.1 சதவீத முதலீடுகளை ஒடிசா ஈர்த்துள்ளது. இவ்விவகாரத்தில் மகாராஷ்டிராவையே ஒடிசா பின்னுக்குத் தள்ளி இருக்கிறது. மகாராஷ்டிரா 12.8 சதவீத முதலீடுகளை ஈர்த்துள்ளது.

ஆந்திரா, ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களும் சேர்ந்து 51.2 சதவீத முதலீடுகளை ஈர்த்துள்ளன. மொத்தம் ரூ.26.6 லட்சம் கோடி முதலீடு கிடைத்து இருக்கிறது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 11.5 சதவீதம் அதிகம் ஆகும்.

தெலங்கானா மற்றும் குஜராத் அடுத்த இடங்களில் இருக்கின்றன. ஜி.எஸ்.டி மற்றும் வருமான வரி குறைப்பு போன்ற காரணங்களால் இந்தியாவிற்கு வரும் முதலீடுகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சோலார், காற்றாலை போன்ற புதுப்பிக்கதக்க மின்சாரத் துறை 22.6 சதவீத முதலீடுகளை ஈர்த்து முதலிடத்தில் இருக்கிறது. உலோகங்கள் 17.3 சதவீத முதலீடுகளை ஈர்த்துள்ளன. இது ஒரு சாதகமான அறிகுறியாகும். ஏனெனில் உலோகங்கள் சாலைகள் மற்றும் ஆட்டோமொபைல்கள் முதல் வீட்டுவசதி வரையிலான பல திட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

இது கட்டுமானம் (வீட்டுவசதி மற்றும் வணிக வளாகங்கள் உட்பட) துறையின் பங்களிப்பை 4 சதவீதமாக நிலையாக வைத்திருக்க உதவுகிறது. தமிழகம் முதலீடுகளை ஈர்ப்பதில் 6 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *