தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக பா.ஜ.க-வில் மிகப்பெரிய நிர்வாக ரீதியான மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக தமிழக பா.ஜ.க-வின் “அமைப்புப் பொதுச்செயலாளர்’ என்ற அதிகாரமிக்க பதவியில் இருந்த கேசவ விநாயகம், அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவர் மீண்டும் ஆர்.எஸ்.எஸ் பணிக்கே திரும்பியிருக்கிறார்.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கும், கேசவ விநாயகம் தரப்புக்கும் இடையே நீண்ட காலமாக ‘நிழல் யுத்தம்’ நடந்து வந்ததாக பேசப்பட்டது. குறிப்பாக, அண்ணாமலை தரப்பினர் கேசவ விநாயகத்தின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அவரின் பணி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
இந்த நிலையில், இந்தியா – அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் குறித்து விளக்கமளிக்கும் வகையில், கோவையில் பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, “எனக்கும் அவருக்கும் என்ன இந்தியா – அமெரிக்கா பிஸ்னஸா நடக்கிறது. கருத்து வேறுபாடு வருவதற்கு… கேசவ விநாயகத்தைப் பொறுத்த வரை, பா.ஜ.க-வில் நீண்ட காலமாக சிறப்பாக பணியாற்றிய நமது அமைப்பு பொதுச்செயலாளர். நிறைய தேர்தல்களை சந்தித்திருக்கிறார். நல்ல மனிதர், கடுமையாக உழைக்கக்கூடியவர், எளிமையாக வாழக்கூடியவர். அவர் இப்போது ஆர்.எஸ்.எஸ் பிரசாரத்தில் இருக்கிறார். அவருக்கு எல்லாப் பொறுப்பும் ஒரே பொறுப்புதான்.