முதல்வர் ஸ்டாலின் அரசு மருத்துவமனைக்குச் செல்லாததற்கு இதுதான் காரணமாம்..!

Spread the love

சென்னை: தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அரசு மருத்துவமனைக்குச் செல்லாததற்கு என்ன காரணம் என்பதற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

முதல்வர் மு. க. ஸ்டாலின் கடந்த சில நாள்களுக்கு முன்னர் உடல்நலம் குன்றியதால் சென்னையிலுள்ளதொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை முடிந்து இன்று(ஜூலை 27) வீட்டுக்குத் திரும்பினார்.

முன்னதாக, பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியபோது, “தமிழகத்தில் முதல்வர் உள்பட, நம்பிக்கையுடன் சென்று சிகிச்சை பெறும் அளவுக்கு அரசு மருத்துவமனைகள் இல்லையே என்பது எனது ஆதங்கம். அபோலோ தரத்துக்கு அரசு மருத்துவமனைகளும் இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தை நான் வெளிப்படுத்துகிறேன். இதில் அரசியல் இல்லை” என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் அரசு மருத்துவமனைக்குச் சென்றால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். அதனால்தான், முதல்வர் தனியார் மருத்துவமனைக்குச் சென்றார்” என்று விளக்கமளித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “அண்மையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரின் மனைவிகூட கோவையில் உள்ளதொரு தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்றார். பிரதமரின் சகோதரர்கூட தமிழகத்தில் தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்றார்.

அரசு மருத்துவமனைகளின் தரம் மிக சிறப்பாகவே இருக்கிறது. அரசு மருத்துவச் சேவை, தனியார் மருத்துவச் சேவை என்று பிரித்துப் பார்க்கக் கூடாது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஆகஸ்ட் 2-இல் நடைமுறைக்கு வரவுள்ள ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம், மக்களை மிகப்பெரிய அளவில் கவரும். இத்திட்டத்தில் முழு உடல் பரிசோதனை செய்யலாம். தனியாரிடம் ரூ. 15,000 முதல் 20,000 ஆயிரம் வரை செலவாகும் பரிசோதனைகளை அரசு மருத்துவமனைகளில் ரூ. 4,000-க்கு மேற்கொள்ளலாம். இருபாலருக்கும் பல்வேறு வகையான புற்றுநோய்களைக் கண்டறியும் பரிசோதனைகளும் நடத்தப்படவிருக்கின்றன” என்றார்.

This is the reason why CM Stalin did not go to the government hospital!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *