மனிதர்களுக்கு வயதாவதை நிறுத்த முடியுமா? பல நூறு ஆண்டுகளாக மனித சமூகம் தேடிக்கொண்டிருக்கும் இந்தக் கேள்விக்கான விடையை, ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நெருங்கியுள்ளனர். நமது உடலில் ஏற்படும் முதுமைக்கும், நாள்பட்ட நோய்களுக்கும் முக்கியக் காரணமான ஜோம்பி செல்களை (Zombie Cells) அழிக்கும் புதிய வழியை அவர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வு, Signal Transduction and Targeted Therapy என்ற அதிகாரபூர்வ மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது.

ஜோம்பி செல்கள் என்றால் என்ன?
நமது உடலில் கோடிக்கணக்கான செல்கள் உள்ளன. இவை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வயதாகி, தானாகவே அழிந்துவிடும். பின்பு அந்த இடத்தில் புதிய செல்கள் உருவாகும். இதுதான் இயற்கையான சுழற்சி. ஆனால், சில செல்கள் வயதான பின்பும் சாகாமல், அதேநேரம் புதிய செல்களாகவும் மாறாமல் உடலிலேயே தங்கிவிடும். திரைப்படங்களில் வரும் ஜோம்பிகளைப் போல, இவை சாகாத பிணங்களாக உடலுக்குள் உலவும்.
இப்படித் தேங்கும் ஜோம்பி செல்கள் விஷத்தன்மை கொண்ட வேதிப்பொருள்களை வெளியிட்டு, அருகில் உள்ள நல்ல செல்களையும் நாசமாக்குகின்றன. இதனால் தான் மனிதர்களுக்கு வயதாகும்போதே மூட்டுவலி, சர்க்கரை நோய், இதய நோய்கள் மற்றும் நுரையீரல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
ஜோம்பி செல்கள் எப்படி உயிர்வாழ்கின்றன?
இந்த ஜோம்பி செல்களை அழிப்பது அவ்வளவு எளிதல்ல. புற்றுநோய் செல்கள் எப்படித் தங்களை அழிவிலிருந்து பாதுகாத்துக்கொள்கிறதோ, அதே தந்திரத்தை இந்த ஜோம்பி செல்களும் பயன்படுத்துகின்றன என்பதை விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர்.
கியோட்டோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹிரோஷி கோண்டோ (Hiroshi Kondoh) தலைமையிலான குழு, இந்தச் செல்களின் ரகசியத்தைக் கண்டுபிடித்துள்ளது. குளுக்கோஸ் சர்க்கரையை உடைத்து ஆற்றலைப் பெறும் ‘கிளைகோலிசிஸ்’ என்ற முறையை இந்தச் செல்கள் பயன்படுத்துகின்றன. இதில், PGAM மற்றும் Chk1 என்ற இரண்டு மூலக்கூறுகள் ஒன்றோடு ஒன்று கைகோத்துக்கொண்டு, இந்த ஜோம்பி செல்களை இயற்கையான மரணத்திலிருந்து காப்பாற்றுகின்றன.

விஞ்ஞானிகளின் அதிரடித் தாக்குதல்!
பிரச்னை எங்குள்ளது என்பதைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள், அதற்கான தீர்வையும் உருவாக்கினர். PGAM மற்றும் Chk1 மூலக்கூறுகள் இரண்டும் கைகோப்பதைத் தடுக்கும் ஒரு புதிய வேதியியல் தடையை அவர்கள் உருவாக்கினார்கள்.
இந்தத் தடையை உடலில் செலுத்தியவுடன் மேஜிக் நடந்தது! அதுவரை சாகாமல் இருந்த ஜோம்பி செல்கள், தங்களைச் சுற்றியுள்ள நல்ல செல்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாமல் தானாகவே அழிந்துபோயின.
எதிர்காலப் பலன்கள் என்ன?
இந்தக் கண்டுபிடிப்பை எலிகளிடம் சோதனை செய்தபோது, அவற்றின் நுரையீரலில் இருந்த கடினமான தழும்புகள் (Lung fibrosis) குணமடைந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம், மனிதர்களின் முதுமையைத் தள்ளிப்போடவும், வயதாவதால் வரும் நாள்பட்ட நோய்களைக் குணப்படுத்தவும் `செனோதெரபி’ (Senotherapy) எனப்படும் புதிய மருத்துவ முறைக்கு இது மிகப் பெரிய வாசலைத் திறந்துள்ளது.

சுருக்கமாகச் சொன்னால், எதிர்காலத்தில் நாம் முதுமை அடைந்தாலும், நோய்களின்றி இளமைத் துடிப்புடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சாவியை விஞ்ஞானிகள் இப்போது கண்டறிந்துள்ளனர்!