“‘முத்தமழை’ பாடல் நிச்சயமாக மக்களுக்குப் பிடிக்குமென நம்பினேன். ஆனால், இத்தனை பெரிய ஹிட் ஆகுமென நான் நினைக்கவில்லை என்பதே உண்மை. எண்ணற்ற பாடல்கள் செய்திருக்கும் ரஹ்மான் சாரும், மணி ரத்னம் சாரும் இந்தப் பாடல் ஹிட் ஆகும் என கணித்திருக்கலாம். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. ஒரு பாடல் சென்சேஷனல் ஹிட் ஆகவேண்டும் என நினைத்தாலே, அது சென்சேஷனல் பிளாப்தான் ஆகும்!
இந்தப் பாடலில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வரி ஃபேவரிட்டாக இருக்கும். எனக்கு இதில் ‘காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ’ வரிதான் மிகவும் நெருக்கமானது. இந்த வரி பெண்களை மட்டுமே குறிப்பதாக புரிந்துகொள்ளப்படும்.

ஆனால், இது அனைவருக்குமே இருக்கக்கூடிய பிரச்னை. காதல் வந்தாலும் போனாலும் நம் கட்டுப்பாட்டில் எதுவுமிருக்காது. இப்பாடல் கவ்வாலி இசை வடிவத்தில் இருக்கும் பாடல் என்பதால், தாளத்திற்கேற்ப இதனை எழுதியதும் மகிழ்ச்சி!
என்னுடைய பாடல்களில் கவித்துவமும் நிறைந்திருக்க வேண்டும் என எண்ணுவேன். அப்போதுதான் அது காலத்தாலும் அழியாத பாடலாக இருக்கும் என்பது என் நம்பிக்கை.” என இடைவெளி தந்தவர், “கண்ணதாசன் எழுதிய ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’ பாடலின் எமோஷன் இதிலும் இருக்க வேண்டும் என நான் நினைத்தேன்.