பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜுகு பகுதியில் உள்ள ஜல்சா என்ற பங்களாவில் வசித்து வருகிறார். இந்தப் பங்களா அமிதாப் பச்சனுக்கு மிகவும் உணர்வுப்பூர்வமாகத் தொடர்புடையது. அமிதாப் பச்சனைப் பார்க்க ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஜல்சா பங்களாவிற்கு வருவது வழக்கம்.
அவர்கள் வீட்டிற்கு வெளியில் பல மணி நேரம் காத்திருந்து அமிதாப் பச்சனைப் பார்த்துவிட்டுச் செல்வது வழக்கம். அமிதாப் பச்சனும் ரசிகர்களை ஏமாற்றாமல் ஒவ்வொரு வாரமும் ரசிகர்களைப் பார்ப்பது வழக்கம்.
இது பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. மிகவும் அபூர்வமாகவே அமிதாப் பச்சன் ரசிகர்களைச் சந்திக்காமல் இருப்பார்.

தான் வசிக்கும் ஜல்சா வீடு குறித்தும், ரசிகர்களைச் சந்திப்பது குறித்தும் அமிதாப் பச்சன் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “‘நாங்கள் வசிக்கும் ஜல்சா வீடு அன்பின் அடையாளம் ஆகும்.
ஒவ்வொரு வாரமும் வரும் என் ரசிகர்கள் எனது குடும்பத்தின் ஒரு பகுதியாகும். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் பிஸியான வாழ்க்கையிலிருந்து எனக்காக ஒதுக்கும் அந்தச் சில நிமிடங்களும், நீங்கள் காட்டும் அன்பும் ஆசீர்வாதங்களும் எனக்கு ஒரு கடவுள் வருகை போன்ற உணர்வைத் தருகின்றன. மக்கள் தங்கள் வேலைகளுக்கு இடையே நேரத்தை ஒதுக்கி தன்னை வந்து சந்திப்பதை ஒரு ஆசீர்வாதமாக கருதுகிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
“‘ஜல்சா’ வெறும் வீடு மட்டுமல்ல, அது லட்சக்கணக்கான மக்களின் ஆசியைப் பெற்ற ஒரு தலம். 30 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களது குடும்பத்திற்கு நிழல் தரும் மரம். எனது பிள்ளைகள் பிறந்தபோதும், அவர்களின் திருமணத்தின் போதும் இந்த இல்லம் அவர்களை ஆசீர்வதித்துள்ளது.
பிள்ளைகள் இங்கே வளர்ந்தார்கள். இப்போது அவர்களின் பிள்ளைகளும் (பேரன், பேத்திகள்) இங்கே வளர்ந்து வருகிறார்கள். எனது குடும்பத்தின் மூன்று தலைமுறைகளைச் சுமந்து நிற்கும் அந்த வீட்டை ஒரு கட்டிடமாகப் பார்க்காமல், மக்களின் அன்பால் நிறைந்த ஒரு புனித இடமாகக் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.