முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை அவரது இல்லத்தில் ஏக்நாத் ஷிண்டே சந்தித்து இரண்டு மணி நேரம் இது குறித்து பேசினார். இப்பேச்சுவார்த்தையில் கடந்த தேர்தலில் மராத்தியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியில் மராத்தி பேசக்கூடிய 79 கவுன்சிலர்கள் சிவசேனாவில் இருந்து வெற்றி பெற்றதாகவும், அதில் தற்போது தங்களுடன் 54 பேர் இருப்பதாகவும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ஷிண்டே தெரிவித்துள்ளார்.
2024ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சிவசேனா(ஷிண்டே) 20 சதவீத வாக்குகள் பெற்றதாகவும், பா.ஜ.க 32.5 சதவீத வாக்குகள் பெற்றதாகவும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 23 சதவீத வாக்குகள் பெற்றதாகவும், ராஜ் தாக்கரேயின் நவநிர்மாண் சேனா 8.5 சதவீத வாக்குகள் பெற்றதாகவும், தாக்கரே சகோதரர்கள் இணைந்திருப்பதால் அவர்களது வாக்கு 32 சதவீதமாக அதிகரித்துவிடும் என்றும் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மராத்தியவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தங்களது கட்சிக்கு போதிய பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லையெனில் அது பா.ஜ.க கூட்டணிக்கு பாதிப்பாக அமையும் என்று ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கையாக கூறி இருக்கிறார்.
மேலும் இஸ்லாமிய வாக்குகள் உத்தவ் தாக்கரே கட்சிக்கு செல்லும்பட்சத்தில் பா.ஜ.கவை விட தாக்கரே சகோதரர்கள் கூடுதல் வாக்குகளை பெற வாய்ப்பு இருப்பதாகவும் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். இதே பிரச்னை தொடர்பாக ஏக்நாத் ஷிண்டேயை பா.ஜ.க தலைவர்கள் அவரது இல்லத்தில் சந்தித்து அதிகாலை 4 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தினர். மும்பை மெட்ரோபாலிடன் பகுதியில் இருக்கும் மாநகராட்சிகளில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்பதை உறுதி செய்தன.
அடுத்த இரண்டு நாட்களில் இரு கட்சிகளும் எத்தனை வார்டுகளில் போட்டியிடுவது என்பதை முடிவும் செய்வது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. உள்ளூர் நிர்வாகிகள் மட்டத்தில் இரண்டு நாள் பேசி எத்தனை தொகுதி என்பதை முடிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டது. இறுதியாக கிடைத்த தகவலின் படி மும்பையில் 90 வார்டுகள் வரை சிவசேனா(ஷிண்டே)விற்கு கொடுக்க பா.ஜ.க முன் வந்துள்ளது. ஆனால் மேலும் 20 வார்டுகள் வேண்டும் என்று ஷிண்டே கேட்டுக்கொண்டிருக்கிறாராம்.