மும்பை: மகன் கண்முன்பாக மனைவியை ஓடும் ரயிலில் தள்ளிக்கொலை செய்த கணவன் | Husband Pushes Wife to Her Death from Moving Train in Mumbai Right Before Son’s Eyes

Spread the love

மும்பை முலுண்ட் பகுதியில் வசிப்பவர் ராஜு குப்தா. இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புஷ்பாவிற்கும், குப்தாவுக்கும் இடையே அடிக்கடி சிறிய சிறிய பிரச்னைகளுக்கெல்லாம் சண்டை ஏற்பட்டுக்கொண்டிருந்தது.

இது தொடர்பாக புஷ்பா போலீஸில் புகார் செய்து இருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறனர். கணவன், மனைவி இடையே சண்டை ஏற்பட்டதில் புஷ்பா தனது மூத்த மகனை அழைத்துக்கொண்டு தனது சொந்த மாநிலமான உத்தரப்பிரதேசத்திற்குச் சென்றுவிட்டார். ராஜூ போன் செய்து மும்பைக்கு வரும்படி கேட்டுக்கொண்டபோது வரமுடியாது என்று புஷ்பா கூறிவிட்டார்.

புஷ்பாவின் சகோதரர் கமலேஷ் ராணுவத்திலிருந்து விடுமுறைக்கு வந்திருந்தார். அவர் தனது சகோதரியை அவரது கணவருடன் சமாதானப்படுத்தி சேர்த்து வைப்பதாகக் கூறி மும்பைக்கு அழைத்து வந்தார்.

ஆனால் மும்பையில் மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து புஷ்பா இது குறித்து மீண்டும் போலிஸில் புகார் செய்துவிட்டு தனது மூத்த மகனையும், கமலேஷையும் அழைத்துக்கொண்டு உத்தரப்பிரதேசம் செல்ல முடிவு செய்தார்.

முதல் கட்டமாக மும்பை அருகில் உள்ள கல்வாவில் இருக்கும் தங்களது உறவினரைப் பார்க்க மூன்று பேரும் புறப்பட்டனர். ஆனால் முலுண்ட் ரயில் நிலையத்திற்குச் சென்றபோது கமலேஷ் தனது ஏ.டி.எம். கார்டு மற்றும் ராணுவ அடையாள அட்டை போன்றவற்றை வீட்டில் வைத்துவிட்டு வந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ராஜுவிற்கு போன் செய்து விசாரித்தார். அங்கு அவை இருப்பதை உறுதி செய்து கொண்டு கமலேஷ் தனது சகோதரியின் மூத்த மகனை மட்டும் அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றார்.

விவாகரத்து கொடுப்பேன் என மிரட்டிய புஷ்பா

புஷ்பா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். வீட்டில் ராஜுவிற்கும், கமலேஷிற்கும் தகராறு ஏற்பட்டது. இத்தகராறில் கமலேஷ் மற்றும் மூத்த மகன் என இரண்டு பேரையும் வீட்டு அறைக்குள் போட்டு பூட்டி விட்டு ராஜு தனது இரண்டாவது மகனை மட்டும் அழைத்துக்கொண்டு ரயில் நிலையத்திற்குச் சென்றார்.

முலுண்ட் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தனது மனைவியிடம் ஊருக்குச் செல்லும் முடிவைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் தொடர்ந்து கொடுமைப்படுத்துவதால் விவாகரத்து செய்யப்போவதாக புஷ்பா தெரிவித்தார்.

இதனால் கோபத்தில் புஷ்பாவை வந்துக்கொண்டிருந்த ரயிலின் முன் தள்ளிவிட்டுவிட்டு தனது மகனுடன் தப்பிச்சென்றுவிட்டார். இதில் புஷ்பா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜுவைத் தேடி வந்தனர். அவர் சூரத்தில் இருப்பதை அறிந்து அங்கு சென்று அவரைக் கைது செய்து அழைத்து வந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *