பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் கடுமையான வலி இருக்கும் என்பதால், அதிகமான மாநிலங்களில் மாதத்திற்கு ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொள்ள பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில தனியார் நிறுவனங்களும் பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் விடுமுறை வழங்குகின்றன.
ஆனால் மும்பையில், தற்கொலைகள் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களுக்காக பாடுபடும் ஒரு தொண்டு நிறுவனம், தனது ஊழியர் மாதவிடாயால் கஷ்டப்படும் நிலையிலும் விடுமுறை வழங்காமல் வேலைக்கு வரும்படி நிர்ப்பந்தம் செய்துள்ளது.

இது குறித்து அந்த பெண் ஊழியர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விரிவாகப் பகிர்ந்துள்ளார். தொண்டு நிறுவனத்தின் இயக்குநருடன், அப்பெண் தனக்கு விடுமுறை கேட்டு சாட்டிங் செய்த ஸ்கிரீன் ஷாட்டையும் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அப்பெண், மாதவிடாய் காரணமாக முந்தைய நாளிலிருந்து கடுமையான வலி இருந்து வருகிறது. எனவே எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அதனால் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பயிற்சி முகாமிலிருந்து விலக்கு அளிக்கும்படி குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள தொண்டு நிறுவன இயக்குநர், “ஒவ்வொரு வாரமும் நடைபெறும் பயிற்சியை ரத்து செய்யாதீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அப்பெண் தொடர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், “ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை வேறு ஒரு தொண்டு நிறுவனத்துடன் பயிற்சி இருக்கும். இம்முறை கல்லூரி ஒன்றில் இரண்டு நாள் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் நான் வேறு வழியில்லாமல் மாதவிடாய் வலியோடு அந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். எனக்கு பதிலாக வேறு ஒரு ஊழியரை அனுப்பும்படி கேட்டேன். ஆனால் முடியாது என்று சொல்லிவிட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது சமூக வலைதளப் பக்கங்களில் வைரலானது. மனநல தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் இத்தகைய ஒரு சூழ்நிலையை எதிர்கொள்வது முரண்பாடான ஒன்றாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.