இந்தியாவிலேயே மிகவும் பணக்கார மாநகராட்சியாக மும்பை மாநகராட்சி விளங்குகிறது. மும்பை முழுவதும் ஏராளமான கட்டமைப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இத்திட்டங்களை மும்பை மாநகராட்சியும், மும்பை மெட்ரோபாலிடன் மேம்பாட்டு ஆணையமும் இணைந்து நிறைவேற்றி வருகின்றன. மும்பை மாநகராட்சி நிர்வாகம் 2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது.
மொத்தம் ரூ. 80, 952 கோடிக்குத் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வரவை விட செலவு அதிகமாக இருந்தது. கடந்த ஆண்டு ரூ. 74,427 கோடியாக இருந்த பட்ஜெட் இப்போது 8.8 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.
இதில் திட்டச் செலவு ரூ. 48,164 கோடியாக இருந்தது. பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை. அதே போன்று சொத்து வரியும் அதிகரிக்கப்படவில்லை. தண்ணீர் மற்றும் வடிகால் பிரிவுக்குக் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி கமிஷனர் பூஷன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வருவாயை அதிகரிக்க மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தில் இருக்கும் கட்டிடங்களை இடித்துவிட்டு புதிதாகக் கட்டுவதற்குக் கூடுதல் எஃப்எஸ்ஐ, டிடிஆர் பயன்படுத்துவதற்கான கட்டணம் அதிகரித்துள்ளது.
மேலும் பொழுதுபோக்கு வரியை அதிகரிப்பதன் மூலம் ரூ.500 கோடி வருவாய் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் ஏற்படும் வருவாய் பற்றாக்குறையைச் சரி செய்ய ஏற்கனவே இருக்கும் வைப்புத் தொகையில் இருந்து ரூ.14 ஆயிரம் கோடியை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இருக்கும் கடற்கரை சாலையை வர்சோவாவில் இருந்து தகிசர் வரை நீட்டிக்க ரூ.4700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காமாட்டிபுரா பகுதியில் 16 மாடியில் புதிய மருத்துவமனை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் பஸ் போக்குவரத்தை இயக்கி வரும் பெஸ்ட் நிர்வாகம் தங்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கும்படி கேட்டு இருந்தது.
ஆனால் மாநகராட்சி பட்ஜெட்டில் வெறும் ஆயிரம் கோடி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கு ரூ.7456 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மும்பையில் கட்டிடங்களின் உயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் தீயணைப்புக்கு ட்ரோன்களைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து பயன்பாட்டிற்கு வரும் என்று பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.