ஆனால் சில வேட்பாளர்களுக்கு இந்த திட்டம் பிடிக்கவில்லை. 2017 தேர்தலில் தோல்வியடைந்து, மீண்டும் களத்தில் இறங்கியுள்ள முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் ஷீத்தல் மத்ரே, இந்த நடவடிக்கை தேவையற்றது என்று கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், “வேட்பாளர்கள் எப்படியும் தாங்கள் போட்டியிடும் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று, தங்கள் பணிகள் மற்றும் வாக்குறுதிகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் அல்லது சிறு புத்தகங்களை விநியோகிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது மீண்டும் ஒரு கட்டுரை எழுதுவதில் என்ன பயன் என்று எனக்குப் புரியவில்லை,” என்று அவர் கூறினார்.

முன்னாள் மாநகராட்சி உறுப்பினரான காங்கிரஸ் எம்.எல்.ஏ. அஸ்லாம் ஷேக், இதுபோன்ற கேள்விக்கு தான் இதற்கு முன்பு பதிலளிக்க நேர்ந்ததில்லை என்று கூறினார். ஷேக்கின் மகன் ஹைதர் 34-வது வார்டிலும், அவரது சகோதரி கமர்ஜஹான் சித்திக் 33-வது வார்டிலும், அவரது மருமகன் சைஃப் அஹத் கான் 62-வது வார்டிலும் போட்டியிடுகின்றனர்.
தேசியவாத காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ராகேஷ் கோயல் இது குறித்து கூறுகையில்,” ஆரம்பத்தில் கட்டுரை மராத்தி மொழியில் எழுதலாம் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் அதை ஆங்கிலத்திலும் எழுதலாம் என்று தேர்தல் ஆணையத்திடம் இருந்து மிகத் தாமதமாகவே விளக்கம் வந்தது. மராத்தியில் இவ்வளவு நீளமான கட்டுரையை எழுதுவது சவாலானது,” என்று கோயல் கூறினார்.
மும்பை ஆம் ஆத்மி கட்சியின் செயல் தலைவரான ரூபன் மஸ்கரேன்ஹாஸ் இது பற்றி கூறுகையில், “வேட்புமனு தாக்கல் செய்யும் போது கட்டுரை எழுதுவது ஒரு மறைமுகமான சிறு தொழிலை உருவாக்கியது. பல வேட்பாளர்கள் தங்கள் கட்டுரையை தயாரிக்க வெளி உதவியை நாட வேண்டியிருந்தது. சிலர் சாட்-ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தியிருக்கலாம், மற்றவர்கள் வேட்பாளரின் தகுதி மற்றும் அவசரத்தைப் பொறுத்து, 5,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை பணம் செலுத்தி, அந்தப் பணியை வழக்கறிஞர்கள் அல்லது ஆடிட்டரிடம் ஒப்படைத்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.