இதனால் இத்தேர்தலில் ஒர்லி பகுதியை தக்கவைத்துக்கொள்வது ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே கூட்டணிக்கு சவாலான ஒன்றாக அமைந்துள்ளது. குறிப்பாக இந்த தொகுதியில் ஆதித்ய தாக்கரே எம்.எல்.ஏ.வாக இருப்பதால் இத்தொகுதியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் சிவசேனா(உத்தவ்) உறுதியாக இருக்கிறது. ஆனால் அதிருப்தி வேட்பாளர்களால் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர்.
2019ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஆதித்ய தாக்கரே தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுரேஷ் மானேயை 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2024 மக்களவைத் தேர்தலில், சிவசேனா(உத்தவ்) வேட்பாளர் அரவிந்த் சாவந்த் ஒர்லி சட்டமன்றத் தொகுதியில் 6,715 வாக்குகள் மட்டுமே பெற்று முன்னிலை பெற்றார். 2024 சட்டமன்றத் தேர்தலில், சிவசேனாவின் மிலிந்த் தியோராவை எதிர்த்து வெறும் 8,801 வாக்குகள் வித்தியாசத்தில் ஆதித்ய தாக்கரே ஒர்லி தொகுதியில் வெற்றி பெற்றார்.
மராத்தியர்கள் ஆதிக்கம் நிறைந்த ஒர்லியை தக்கவைத்துக்கொள்வது தாக்கரே சகோதரர்களுக்கு மிகவும் கெளரவ பிரச்னையாக அமைந்துள்ளது. சமீபத்தில் ஒர்லி தொகுதியை சேர்ந்த நவநிர்மாண் சேனா மூத்த தலைவர் சந்தோஷ் தூரி அக் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்தார். அதோடு மும்பை நவநிர்மாண் சேனா தலைவர் சந்தீப் தேஷ்பாண்டேயும் அக்கட்சியில் இருந்து விலக இருப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிறது. ஆனால் இதனை சந்தீப் தேஷ்பாண்டே திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதிருப்தி வேட்பாளர்கள், நவநிர்மாண் சேனாவின் ஒத்துழைப்பு இன்மை போன்ற காரணங்களால் ஒர்லியை தக்கவைத்துக்கொள்வதில் ஆதித்ய தாக்கரே திணறி வருகிறார்.