அதே நேரம் எடப்பாடி தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசும்போது, `பன்னீர் கூட்டணிக்குள் வருவதில் எந்தச் சிக்கலும் எனக்கு இல்லை. ஆனால், அவரை கட்சியில் சேர்ப்பது என்பது நடக்காத காரியம். கட்சியை இப்போதுதான் என் முழுக்கட்டுபாட்டில் வைத்திருக்கிறேன்.
அவரை உள்ளே விட்டால் ஆபத்தில் முடிந்துவிடும்’ என்று சொல்லியிருக்கிறார்.
பன்னீர் செல்வத்திற்கு இந்த தகவல்கள் எல்லாம் வந்து சேர்ந்த பிறகு மௌனமாக அனைத்தையும் கேட்டுள்ளார். `நான் கட்சித் தலைவர் பதவியை எல்லாம் கேட்கவில்லை. அவைத் தலைவர் பதவியைக் கொடுத்தால்கூட போதும்.
ஆனால் கூட்டணியில் இணைவதற்கே வழக்குகளை வாபஸ் வாங்கச் சொல்கிறார்கள். இவர்களை நம்பி வழக்குகளை வாபஸ் வாங்கினால் எதிர்காலத்தில் எனக்கும் அ.தி.மு.க-வுக்கும் உள்ள உறவே முழுமையாக துடைக்கப்படும். அதற்கு நான் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கூட இருந்துவிடலாம். தேர்தல் முடிவுக்குப் பிறகு கட்சியில் இணைவதைப் பற்றி எல்லோரும் பேசும் நிலை வந்துவிடும்’ என்று எடப்பாடியிடமிருந்து வந்த துாதுக்கு, பதில் சொல்லியிருக்கிறார்” என்றனர் விரிவாக.
தி.மு.க தரப்பிலும் பன்னீர் ஆலோசனை செய்துள்ளார். அங்கிருந்து சாதகமான பதில் வரவில்லை. எனவே எப்படியாவது அ.தி.மு.க வில் இணைவது மட்டுமே தனக்கும் தனது வாரிசுகளுக்கும் எதிர்காலத்தில் பாதுகாப்பு என்கிற முடிவிற்கு வந்துள்ளார். அதற்கான காத்திருப்பைத்தான் பன்னீர் இப்போது மேற்கொண்டுவருகிறார். பன்னீரின் காத்திருப்புக்குப் பலன்கிடைக்குமா? அல்லது கானல்நீராக மாறுமா.. என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.