ஓர் இளம் பெண் விபத்தில் சிக்குகிறாள். அவளுடைய நினைவுகள் தற்காலிகமாக அழிந்துபோகின்றன. 6 வயது வரைக்குமான நினைவுகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. எனவே, உடலளவில் வளர்ந்திருந்தாலும் மனதளவில் அவள் ஒரு சிறுமிதான். இப்படியொரு குழந்தையை பாலியல் விடுதியிலிருந்து மீட்டெடுக்கிறான் ஓர் இளைஞன். தன்னுடனே வைத்து பராமரிக்கிறான். தாயுமானவனாகவும் மாறி அவளைச் சீராட்டுகிறான்.
ஆனால், இவனுடைய முயற்சியில் ஒரு நாள் அவளுக்கு பழைய நினைவுகள் திரும்புகின்றன. துரதிர்ஷ்டவசமாக இவன் அப்போது அருகில் இருக்க முடியாத சூழல். கடைசி முறையாக இவளைப் பார்த்து விட முடியாதா என்று ஓடி வந்து கீழே விழுந்து அடிபட்டு ரயில் நிலையத்திற்கு வருகிறான். ஆனால், அவளால் இவனை அடையாளம் காணவே முடியவில்லை.
“விஜி… சீனு… விஜி…” என்று முன்னர் குரங்கு போல் பாவனை செய்து அவளை சிரிக்க வைத்த சேஷ்டைகளை இப்போதும் செய்து காட்டுகிறான். ம்ஹூம்… அத்தனையும் வீண். ‘விஜி’ என்கிற அவனுடைய தோழி, நினைவு திரும்பி ‘பாக்யலஷ்மி’யாக திரும்பிப் போவதை அவனால் தடுக்க முடியவில்லை.

அழுகையும் துயரமுமாக கிளம்பிச் செல்லும் ரயிலின் பின்னாடியே ஓடி வந்து இரும்புத் தூணில் கமல் முட்டிக்கொண்டு கீழே விழும் போது அவருக்கு வலித்ததோ… இல்லையோ… பார்வையாளர்களுக்கு அத்தனை வலித்தது. இந்தியச் சினிமாவின் மிகச் சிறந்த கிளைமாக்ஸ்களைக் கணக்கெடுத்தால் அதில் ‘மூன்றாம் பிறை’ உத்தரவாதமாக இடம் பெறும்.
கிரிக்கெட் ஆட்டத்தில் ஒருவர் எதிரணியிடம் நீண்ட நேரம் தாக்குப் பிடித்து அதிக ரன்களை எடுத்து அவுட் ஆகியிருப்பார். ஆனால், பரபரப்பான இறுதி ஓவரில் ஒருவர் வந்து அட்டகாசமாக ஆடி மேட்ச்சை வென்று தருவார். பார்வையாளர்களின் கவனம் முழுவதும் இவர் மீது வந்து விழுந்துவிடும். இதிலும் அப்படியே!