இஸ்லாம் குர்ஆனிலும், கிறிஸ்தவம் பைபிலிலும் நூஹ் – நோவா என்பவரின் சம்பவத்தைப் பதிவு செய்திருக்கிறது. உலகை அழிக்க நினைத்த இறைவன் இவர் மூலம் நல்லவர்களை காப்பாற்றி இந்த உலகை மீளுறுவாக்கம் செய்ததாக அந்த சம்பவம் முடியும்.
தற்போது ஆப்ரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஒருவர் தன்னை தீர்க்கதரிசி என அழைத்துக்கொள்கிறார். தன்னை நோவானின் மகன் எனப் பொருள்படும்படியான் எபோநோவா என அடையாளப்படுத்திக்கொள்ளும் அவர், டிசம்பர் 25 அன்று மீண்டும் இறைவன் மனிதகுலத்தை அழிக்க முடிவு செய்திருப்பதாகவும், நல்லவர்களை காப்பாற்ற பத்து பெரும் பேழைகளை செய்யக் கட்டளையிட்டதாகவும் ஆகஸ்ட் மாதம் முதல் பிரசாரம் செய்துவருகிறார்.
“பூமியை மூழ்கடிக்கப் போகும் பைபிள் கால வெள்ளத்திலிருந்து மனிதர்களையும் அனைத்து விலங்கினங்களையும் காப்பாற்றுவதற்காக, நோவாவின் பணியைத் திரும்பச் செய்யும்படி கடவுள் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்” எனக் கூறுகிறார்.
அவரின் சமூக ஊடகப் பக்கத்தைப் கவனித்தால் அவர் கோணித்துணியை உடையாக அணிந்து, ஒரு கையில் புத்தகமும், மற்றொரு கையில் செல்போனுமாக வலம் வருகிறார். அவர் கானா நாட்டில் இருக்கிறார் என்பது செய்திகளின் மூலம் அறியமுடிகிறதே தவிர, அவர் எந்தப் பகுதியில் வசிக்கிறார் என்பதற்கான எந்த குறிப்பும் கிடைக்கவில்லை.