சென்னை: நுங்கம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத கிரேனில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால், உத்தமர் காந்தி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
சென்னையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெறுகின்றன. இவற்றில், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான 45.4 கி.மீ. தொலைவு வரை 3-வது வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
28 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 19 உயர்மட்ட மெட்ரோ நிலையங்களும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கெல்லீஸ் முதல் தரமணி வரையிலான 12 கி.மீ. தொலைவு வரை சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. எட்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதுபோல, பல்வேறு இடங்களில் ராட்சத கிரேன்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நுங்கம்பாக்கம் பகுதியில் தெரேசா சர்ச் அருகில் மெட்ரோ ரயில் திட்டப் பணியில் ஈடுபட்ட ராட்சத கிரேன் நேற்று காலையில் திடீரென பழுது ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த மெட்ரோ ரயில் தொழில்நுட்ப பணியாளர்கள் இரண்டு மணிநேரம் போராடி பழுதை சரி செய்தனர்.
ராட்சத கிரேன் பழுதாகி சாலையில் நின்றதால், உத்தமர் காந்தி சாலையில் இருந்து அண்ணா சாலை நோக்கி செல்லும் வழியில் நேற்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நின்றதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.