சென்னை மெரினா
சென்னை மெரினா கடற்கரை சாலையில் காற்று வாங்கி வந்தவர்கள், நவீன நடைபாதை அமைப்பின் காரணமாக, இன்று கடலில் கால் நனைத்து களிப்படைகிறார்கள்!
பரபரப்பான வாழ்வில் ஓடிக்கொண்டிருக்கும் சென்னைவாசிகளுக்கு பல பொழுதுபோக்கு தளங்கள் இருப்பினும், அனைத்து தரப்பினருக்குமான பொழுதுபோக்கு இடம் என்றால் அது மெரினா கடற்கரை தான். என்ன தான் சென்னையில் திருவான்மியூர், பெசன்ட் நகர் கடற்கரைகள் மக்கள் பொழுதுபோக்கு இடங்களாக இருந்தாலும், சென்னைக்கு வருவோரின் முதல் கனவு இடமாக மெரினா கடற்கரை தான் உள்ளது.
சென்னை மக்களின் கவனத்தை ஈர்க்கும் பொழுதுபோக்கு தளமாகவும், சென்னைக்கு புதிதாக வருவோருக்கு சுற்றுலா மையமாகவும் விளங்கும் மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் முயற்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.

நீல கொடி திட்டம்
“நீல கொடி” திட்டத்தின் கீழ், 33 சர்வதேச தரநிலைகளை பூர்த்தி செய்யும் வகையில், மெரினா கடற்கரை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் மாற்றப்படுகிறது. மேலைநாட்டு கடற்கரைகளில் இருப்பதுபோல், மூங்கில் குடில்கள், மக்கள் இளைப்பாற சாய்வு மூங்கில் நாற்காலிகள், அழகுபடுத்தும் நோக்கில் புன்னை மரங்கள் நடவு பணிகள், மூங்கில் மரத்தால் செய்யப்பட்ட இருக்கைகள், கண்காணிப்பு கோபுரங்கள் உள்ளிட்ட அமைப்புகளுடன் மெரினா கடற்கரை பரப்பே மாற்றம் பெற்று வருகிறது.