கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் மாநில அரசு அதை நிறைவேற்றாமல் இருக்கிறது. எந்த முகாந்திரமும் இல்லாமல் திமுகவினர் அதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

சட்டம் ஒழுங்கு பிரச்னை என்று பொய்யான காரணங்களை கூறுகிறார்கள். தமிழர்களின் அடையாளங்களை அழிக்கிற விதமாக திராவிட மாடல் திமுக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
திமுக-வினரின் நோக்கமே இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டும், இந்து கோயில்களுக்கு உரிய மரியாதை கொடுக்கக் கூடாது என்பது தான். அது அவர்களின் ரத்தத்தில் ஊறியுள்ளது. ஆன்மிக நம்பிக்கையை எந்த அரசியல் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.
ஊழல்வாதிகளை மிரட்டி தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறுகிறார். இவ்வளவு பேசும் முதலமைச்சர் அவரது அமைச்சரவையில் உள்ள கே.என் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது ஊழலாக தெரியவில்லையா.
முதலமைச்சர் தன் அருகில் இருப்பவர்களை பார்த்துவிட்டு பேசினால் நியாயமாக இருக்கும். ஊழல் வழக்கிற்காக பதவியில் இருந்த அமைச்சரை வீட்டிற்கு அனுப்பிய பெருமைக்குரியவர் முதலமைச்சர் ஸ்டாலின் தான். அவருக்கு எங்களை பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.
விஜய் என்னதான் புது புது வார்த்தைகளால் பேசினாலும், அல்டிமேட்டாக திமுகவை வீழ்த்தப் போவது தேஜகூ தான். மேடை ஏறலாம், வசனம் பேசலாம், கூட்டத்தையும் காட்டலாம். ஆனால் திமுகவை வீழ்த்தும் சக்தி எங்களுக்கு தான் இருக்கிறது” என்றார்.