1927 வரை மேட்டூர் கிராமத்திலிருந்து காவிரியின் இடக்கரைக்கு செல்ல ஒரே வழி பரிசல் மட்டுமே. பரிசல் ஓட்டுபவர்கள் ஆற்றின் கடினமான நீரோட்டத்தையும் திறமையாகக் கடந்து சென்றனர். இந்த பரிசல்களை இயக்குபவர்கள் அந்த வேலையில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர் என்று பதிவு செய்துள்ளனர், பிரிட்டிஷ் பொறியாளர்கள்.
இந்தத் திறமை, ஆற்றின் மிக கடினமான நீரோட்டத்தை கடந்து சரியாக இயக்கி குறிப்பிட்ட இடத்தை அடைவதற்கு மிகுந்த தேவையாக இருந்தது. அதேசமயம் விபத்துக்கள் நடப்பதென்பது அநேகமாக இல்லை எனலாம்! ஏனெனில், அவ்வளவு திறமை வாய்ந்தவர்களாக பரிசில் ஓட்டுபவர்கள் திறன் பெற்று இருந்தனர். ஆற்றை கடக்கவும், மீன்களைப் பிடிக்கவும் இந்த வகை பரிசல்களே பயன்படுத்தப் பட்டன!
ஆற்றில் அதிக அளவு நீர் செல்லும் போது இக்கரையில் இருந்து பரிசலில் புறப்பட்டால் அக்கரையைச் சென்றடைவதற்கு முன்பாக, ஆற்றின் வேகத்தில் நீரோட்டத்தால் மெல்ல இழுக்கப்பட்டு, அநேகமாக சுமார் ஒருமைல் தூரம் தள்ளி அக்கரையில் இறங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்! பிறகு, அங்கிருந்து பரிசலை தோளில் சுமந்தபடி, அக்கரையின் ஓரமாகவே பொடி நடையாக நடந்து வந்து சென்றடைய வேண்டிய இடத்தை அடைய நேரிடும்.
கனரக கட்டுமான கருவிகள் அல்லது பொருட்களை இந்த பரிசல்கள் மூலம் அணையின் இடது புறத்திற்கு கொண்டு செல்வது என்பது இயலாத காரியம். ஓரளவு சிறிய இயந்திரங்கள் மற்றும் கருவிகளை அவசரத் தேவைக்காக மேட்டூர் கிராமத்திலிருந்து இடது புறக்கரைக்கு கொண்டு செல்ல, நான்கு பரிசல்களை ஒன்றாக நிறுத்தி, ஒன்றுடன் ஒன்று கட்டி அதற்கு மேல் மரக்கட்டைகளை வைத்து சமதளம் போல் ஏற்படுத்தி, மூங்கில் வார்களைக் கொண்டு கட்டி, பொருட்களை அதில் வைத்து மிக கவனமாக அக்கரைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் வரை இந்த நிலையே நீடித்தது.