மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியை எட்டியது; நீர்வரத்து விநாடிக்கு 23,989 கன அடியாக அதிகரிப்பு | Mettur dam water level reached 50 feet

1281333.jpg
Spread the love

மேட்டூர்: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 23,989 கன அடியாக அதிகரித்திருப்பதுடன், நீர்மட்டமும் 50 அடியை எட்டியுள்ளது.

கர்நாடகாவில் பெய்துவரும் கனமழை காரணமாக, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

அதன்படி, அணைக்கு நேற்று முன் தினம் மாலையில் 16,577 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலையில் 20,910 கனஅடியாக உயர்ந்தது. பின்னர் மாலையில் நீர்வரத்து 21,520 கனஅடியாகவும் அதிகரித்தது.

இந்நிலையில், அணைக்கான நீர்வரத்து இன்று (வியாழக்கிழமை) காலை மேலும் அதிகரித்து விநாடிக்கு 23,989 கன அடியாக உயர்ந்துள்ளது.

குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. வெளியேற்றப்படும் நீரைவிட, அணைக்கான நீர்வரத்து அதிகமாக உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 46.80 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 50.03 அடியாக உயர்ந்துள்ளது.

நீர் இருப்பு 15.85 டிஎம்சியில் இருந்து 17.83 டிஎம்சியாக உயர்ந்துள்ளது. அதன்படி, கடந்த 2 நாளில், அணையின் நீர்மட்டம் 6.2 அடியும், நீர் இருப்பு 3.69 டிஎம்சியும் உயர்ந்துள்ளது. கடந்த மே மாதம் 17-ம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49.95 அடியாகவும், நீர் இருப்பு 17.78 டிஎம்சியாகவும் இருந்தது.

அதன் பின்னர், 62 நாட்களுக்கு பிறகு, மீண்டும் நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ளது. அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், நீர்மட்டம் மேலும் உயரும் என நீர்வளத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *