மனைவியை மகிழ்விக்கக் கதாநாயகன் செய்யும் சேட்டைகள், அதனால் கிருஷ்ணன் படும் பாடு, ஆஸ்பத்திரியில் தம்பதிகள் செய்யும் கலாட்டா எனக் கதையிலிருந்து விலகியோடும் காமெடி காட்சிகள் இரண்டாம் பாதியின் பாதி வரை ஓடுகின்றன. அவற்றிலும் பாதியே க்ளிக் ஆகியிருக்கின்றன.
மீண்டும் சிறுநீரகத் திருட்டிற்கு எதிரான சட்டப்போராட்டத்திற்குள் நுழையும் திரைக்கதை, தேவையான நிதானத்தையும் தெளிவையும் கொடுக்காமல் கடகடவென ஓடுகிறது. அதனால், அரசு vs சாமானியன் என்ற வீரியமான மையக்கதை தேவையான அழுத்தத்தைத் தராமல் போகிறது.
மேலும், இவ்வளவு ஊடகப் புகழ்பெற்ற முத்து சிற்பியை ஏன் இத்தனை அபாயகரமான முயற்சிக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள், தொடக்கத்தில் அப்பாவித்தனமாகவும் பிற்பாடு விவரம் தெரிந்த தைரியசாலியாகவும் எப்படி முத்து சிற்பி கதாபாத்திரம் மாறுகிறது போன்ற பிரதான லாஜிக் ஓட்டைகள் துருத்திக்கொண்டு நிற்கின்றன.
இவற்றைத் தாண்டி, உணர்வுபூர்வமான இறுதிக்காட்சி நேர்த்தியாகக் கைகூடி, மிதமான சிலிர்ப்பைத் தருகிறது.
சமகால சமூக அவலத்தைப் பேசும் மையக்கதை கவனிக்க வைத்தாலும், அதைத் தெளிவான திரைக்கதையில் திடமாகச் சொல்லியிருந்தால், இந்தச் சாமானியனின் தீர்ப்பு இன்னும் உரக்கக் கேட்டிருக்கும்.