பிரயாக்ராஜ் மகா கும்பமேளா மூலம் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே வைரல் நட்சத்திரமானார். கேரளத்தில் சினிமா படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள அவர், தனது காதலனான மகாராஷ்டிராவைச் சேர்ந்த முஹம்மது ஃபர்மான் கானை திருமணம் செய்துகொண்டார். பெற்றோர் எதிர்த்ததால் திருவனந்தபுரம், தம்பானூர் காவல் நிலையத்தில் காதலன் முஹம்மது ஃபர்மான் கானுடன் தஞ்சம் அடைந்தார். பின்னர் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் முன்னிலையில் பூவாறில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். அப்போது மோனலிசாவுக்கு 18 வயது பூர்த்தியடையவில்லை என விவாதம் எழுந்தது. ஆதாரங்களின் அடிப்படையில், அவருக்கு 18 வயது ஆகவில்லை என்றும், அதனால் திருமணம் செய்துகொள்வதற்கான சட்டப்பூர்வ வயது அவருக்கு இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், லவ் ஜிகாத் என்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டது. மகாகும்பமேளா சமயத்தில் மோனாலிசா போஸ்லேவுக்கு 16 வயதுதான் ஆகியிருந்தது எனவும், அவரது ஆவணங்களில் திருத்தம் செய்திருக்கலாம் எனவும், மோனலிசா போஸ்லே-வுக்கு 18 வயது ஆகவில்லை என்றும், அவரது வயது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சினிமா இயக்குநர் சனோஜ் மிஸ்ரா அந்தச் சமயத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மோனாலிசா போஸ்லே கொச்சியில் தன்னுடைய கணவர் முஹம்மது ஃபர்மான்கானுடன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “எனது முதல் திரைப்படமான “தி டைரி ஆஃப் மணிப்பூர்’ சினிமா இயக்குநர் சனோஜ் மிஸ்ரா படப்பிடிப்புத் தளத்தில் என் உடலில் பலமுறை தவறான நோக்கத்தில் கைவைத்தார். நேபாளம் மற்றும் டேராடூன் ஆகிய இடங்களில் வைத்து பலமுறை என்னிடம் மோசமான முறையில் நடந்துகொண்டார். அன்றே இது பற்றி எனது குடும்பத்தினரிடம் தெரிவித்தேன். அது எனது முதல் படம் என்பதால், அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்களுக்குப் பணம் மட்டுமே பிரதானமாக இருந்தது. எனக்கு 18 வயது பூர்த்தியாகும் முன்பே இது போன்ற துயரமான நிகழ்வுகள் நடந்தன.