வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த திரைப்படம் சந்திரமுகி. அக்காலத்தில் அனைத்து சிறுவர்களுக்கும் இத்திரைப்படம் நீங்காத நினைவுகள் கொடுத்திருக்கிறது. அப்படத்தில் வெளியான “தேவுடா.. தேவுடா..” பாடல் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் வரவேற்பு பெற்றது.
தினமும் தொலைக்காட்சி பெட்டியில் இப்பாட்டை பார்த்து ரசித்திருப்போம். 90 களில் பிறந்தவர்களின் முதல் மின்னணு விளையாட்டுச் சாதனமான பொம்மை தொலைபேசியில் இப்பாடலை வைத்து விளையாடி இருப்போம்.
பள்ளிகளில் தனித் திறமைகளை காட்டுவதற்கு இப்படத்தின் பாடல்களையும் வசனங்களையும் பயன்படுத்தி கைத்தட்டல்கள் வாங்குவோம்.
இவ்வாறு இப்படம் நூறு நாட்கள் வெற்றிகரமாக திரையிடப்பட்டது. அதில் ஒருநாள் நான், என் அண்ணன் மற்றும் தங்கை மூவரும் அடம்பிடித்து சந்திரமுகி படத்தை காண திரையரங்கிற்கு சென்றோம்.

அதிகாலையில் முதல் பேருந்தைப் பிடித்து 30 மைல் பயணம் செய்து திரையரங்கை வந்தடைந்தோம். அவரது ரசிகர்களின் விசில் சத்தம் காதுகளை துளைத்துக் கொண்டிருந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற பெயர் திரையில் தோன்றிய போது சத்தம் மேலும் அதிகரித்தது. படம் ஆரம்பித்த உடனே நாங்கள் விரும்பிய தேவுடா..தேவுடா..பாடல் திரையில் தோன்றியது. அந்த பாடலை மனப்பாடம் செய்த என் தங்கை பாடலை சத்தமாக பாடிக் கொண்டிருந்தாள்.
பாட்டு ஓடிக்கொண்டு இருக்கும் போது பாடலில் திடீரென நிறுத்தம் ஏற்பட்டது. பாடலை ஆடியோவாக கேட்ட போது நிறுத்தம் ஏதும் இருக்காது. இது தெரியாத என் தங்கை ஹரே ஹரே ஹரே.. என்று சத்தமாக பாடி விட்டாள். அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர். இவ்வாறு அந்தத் திரைப்பட அனுபவம் மறக்க முடியாத நினைவுகளாக இருக்கிறது.