ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான புதிய நடைமுறைகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
திருவிழாக்கள், பண்டிகை நாள்களையொட்டி பயணம் மேற்கொள்ள, ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வது கடுமையான சவாலான ஒன்றாக மாறிவிட்டது.
ரயிலில் டிக்கெட் முன்பதிவு என்பது தற்போது குதிரைக் கொம்பாக மாறிவிட்டது. டிக்கெட் முன்பதிவுக்கான கால அவகாசம் 120 நாள்களில் இருந்து 60 நாள்களாகக் குறைக்கப்பட்ட பின்னர், டிக்கெட் முன்பதிவு மற்றும் தத்கல் பதிவிலும் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.
நேரடியாக ரயில் நிலையத்தில் சென்று டிக்கெட் பதிவு செய்ய முயன்றாலும் கட்டுக்கடங்காத கூட்டத்தால் சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்து விடுகின்றன.
இதனால், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது டிக்கெட் முன்பதிவுகளில் கடுமையான நடைமுறைகளை மத்திய ரயில்வே அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.
அதன்படி, ரயில் பொது டிக்கெட் முன்பதிவுகளில் ஆதார் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முதல் 15 நிமிடம் அனுமதிக்கப்படும் என்றும், இந்த நடைமுறை வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.