தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பலராலும் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது. மேலும் தேர்தல் பணிகளை பல மாதங்களுக்கு முன்பே அரசியல் கட்சிகள் கவனிக்க தொடங்கி விட்டனர். இதனிடையே புதிதாக கட்சி தொடங்கிய விஜய்க்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
அதிமுக தவெகவுடன் கூட்டணி வைத்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் அதிமுக தவிர்த்து தங்களது தலைமையில் புதிய அணியை உருவாக்க விஜய் நினைக்கிறார். அதன்படி திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தவெக வலை வீசி வருகிறது.
இதில் காங்கிரசும் தவெகவுடன் கூட்டணி வைத்து கொள்வதில் விருப்பம் உள்ளது. இதனிடையே ராகுல்காந்தியின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி ரகசியமாக சென்னை வந்து சென்று இருக்கிறார்.
இந்த வருகையின் போது சென்னை பட்டினபாக்கத்தில் உள்ள விஜய் அவரது இல்லத்தில் பிரவீன் சக்ரவர்த்தி ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தி விட்டு சென்று இருப்பதாக சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணிக்கு வந்தால் எத்தனை தொகுதிகள் தரவீர்கள் உள்பட கூட்டணி தொடர்பாக பல்வேறு விஷயங்கள் குறித்து விஜயுடன் பிரவீன் சக்ரவர்த்தி 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
நேற்றைய தினம் காங்கிரசு ஐவர் குழு அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசி இருந்தனர். இந்த நிலையில் விஜய் உடன் பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
