மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்துவதாகக் குற்றம்சாட்டி, பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே மக்களவையில் வியாழக்கிழமை “தனி நபர் தீர்மானம்’ (Substantive Motion) ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த தீர்மானத்தில், `ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிப்பதோடு, அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்’ என்றும் கோரப்பட்டிருக்கிறது.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “இந்தியாவை அமெரிக்காவிடம் பிரதமர் மோடி விற்றுவிட்டார். விவசாயிகளுக்கு எதிராக அமெரிக்க பொருள்களுக்கு இந்தியக் கதவை திறந்துவிட்டிருக்கிறார். நாம் எங்கு எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை அமெரிக்காதான் முடிவு செய்கிறது. நம் சுயமரியாதையை இழந்து, அடிமையைப் போல அமெரிக்காவிடம் இந்தியா உரையாற்றியிருக்கிறது” எனக் காட்டமாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில்தான் எம்.பி நிஷிகாந்த் துபே நாடாளுமன்றத்தில் தனிநபர் தீர்மானத்தை தாக்கல் செய்திருக்கிறார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், “நாட்டைப் பலவீனப்படுத்த விரும்பும் ஜார்ஜ் சோரோஸ் போன்ற சக்திகளின் உதவியுடன் ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்துகிறார்.