மும்பை: “இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்வது தொடர்பாக தெரிவித்த கருத்துக்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.11 லட்சம் வெகுமதியை வழங்குவேன்’ என்று சிவசேனை எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சஞ்சய் கெய்க்வாட் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராகுல் காந்தி அண்மையில் அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டார்.
அப்போது இந்தியாவில் இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய தாம் விரும்புவதாக அவர் கூறியுள்ளார். இது காங்கிரஸ் கட்சியின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்திவிட்டது.
இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனநிலையை ராகுல் காந்தியின் பேச்சு உணர்த்துகிறது. இவ்வாறு கருத்து கூறியதற்காக ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவர்களுக்கு நான் ரூ.11 லட்சம் வெகுமதியை வழங்குவேன்.
அரசமைப்புச் சட்ட வரைவுக்குழு தலைவரான அம்பேத்கரை தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் தோற்கடித்தது.
ராகுல் காந்தியின் கருத்துகள் மக்களுக்கு இழைக்கப்படும் நம்பிக்கை துரோகமாகும். மராட்டியர்கள், தங்கார்கள், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் ஆகியோர் இடஒதுக்கீட்டுக்காகப் போராடி வருகின்றனர். இந்தச் சூழலில் இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து ராகுல் காந்தி பேசியுள்ளார்.
அவர் அரசமைப்புச் சட்ட புத்தகத்தை கையில் வைத்தபடி, “அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பாஜக முயற்சிக்கும்’ என்று தவறான கருத்தைக் கூறுவது வழக்கம். ஆனால், உண்மையில் இந்த நாட்டை 400 ஆண்டுகள் பின்னோக்கிக் கொண்டு செல்லத் திட்டமிடுவது காங்கிரஸ் கட்சிதான் என்று சஞ்சய் கெய்க்வாட் தெரிவித்தார்.