நேர்காணலுக்குக் காத்திருந்த போது, ஏ.ஆர்.ரஹ்மான் எதேச்சையாக என்னைப் பார்த்து “ஹாய்” என்று பல ஆண்டுகால நண்பரைப் போலக் கூப்பிட்டது மெய்சிலிர்க்க வைத்தது. நேர்காணலின் போது பலமுறை ஆனந்தக் கண்ணீர் வந்தது. அதைத் தட்டுத்தடுமாறி கட்டுப்படுத்திக்கொண்டேன்.
நேர்காணலின் இறுதியில் ஏ.ஆர். ரஹ்மான் கேட்ட அந்த ஒரு கேள்வி உலுக்கியது:
ஏ.ஆர்.ரஹ்மான்: “பிப்ரவரி 14-ம் தேதி ஃப்ரீயா இருக்கீங்களா? வந்து ஏதாவது பாடுறீங்களா?”
அலெக்ஸ்: “என்னது?”
ஏ.ஆர்.ரஹ்மான் (தனது குழுவிடம்): “அலெக்ஸ்க்கு ஒரு பாடல் கொடுங்கப்பா. ‘ராசாத்தி’ பாடல் பாடுறீங்களா?”
பிப்ரவரி 14-ம் தேதி நடந்த இசை நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையில், ரஹ்மான் காட்டிய அக்கறை நெகிழ்ச்சியடையச் செய்தது. நேரம் குறைவாக இருந்ததால் சில பாடல்களை நீக்க வேண்டிய சூழல் இருந்தது. என்னை மிக எளிதாகத் தவிர்த்திருக்கலாம். ஆனால், நான் மேடையில் ஆசுவாசமாக உணர வேண்டும் என்பதற்காக எனக்காக மூன்று முறை என்னுடன் அமர்ந்து ஒத்திகை பார்த்தார். அங்கு வந்திருந்த மற்றவர்கள் அனைவரும் அனுபவம் வாய்ந்த கலைஞர்கள், ஆனால் எனக்கு அவர் கொடுத்த அந்த முக்கியத்துவம் பெரியது.
பிப்ரவரி 14 அன்று அந்த மைதானமே அன்பால் நிறைந்திருந்தது. எனது பாடலை நீங்கள் அனைவரும் கொண்டாடிய விதம், ஏ.ஆர்.ரஹ்மான் என்ற மனிதரின் அன்பின் நீட்சியாகவே எனக்குத் தெரிந்தது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.