`ராஜா அப்படிப்பட்டவர் அல்ல… தவறான கணிப்பில் இப்படி’ – சர்ச்சை சம்பவம் குறித்து சாலமன் பாப்பையா

Spread the love

இந்த நிலையில், சாலமன் பாப்பையா இந்த விவகாரம் தொடர்பாக தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “தமிழ் மக்களுக்கு என் அன்பான வணக்கம். தம்பி ராஜாவைப் பற்றி ஒரு தவறான செய்தி நம்முடைய ஊடகங்களில் போய்க்கொண்டிருப்பதை நான் காண்கிறேன், கேட்கிறேன். யாரோ ஒரு தாய் அறிந்தோ அறியாமலோ அவரை பற்றி ஒரு தவறான கணிப்பிலே இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். ராஜா என்னுடைய பண்ணையிலே 45 ஆண்டுகளுக்கு மேலே இருக்கிறார், அவர் எப்படிப்பட்டவர் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். என்னுடைய பிள்ளை அது.

`சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாரதியின் சந்தத்தை அவருடைய சிந்தையில் ஏற்றுக்கொண்டவர். அவருக்கு இப்படிப்பட்ட எண்ணங்கள் கிஞ்சித்தும் இருக்காது என்பதை நான் சத்தியம் செய்து சொல்லுவேன். ஆனால் அப்படிப்பட்ட மனிதரை ஏதோ ஒரு தவறான கணிப்பினால் இப்படிச் சொல்லியிருப்பது எனக்குத் தெரியவில்லை. நான் அங்கு இல்லாதபோது எதையும் உறுதிப்படுத்த முடியாது. ஆனால் அவருடைய மனசுக்குள்ளே சாதிய உணர்வோ அதைப் பற்றிய சிந்தனையோ கிஞ்சித்தும் இல்லை என்பதை நான் ஆயிரம் முறையில் சத்தியம் பண்ணி சொல்லுவேன். அவரைப் பற்றி இப்படிச் சொன்னது உள்ளபடியே எனக்கெல்லாம் மிகப்பெரிய வருத்தம்.

சாலமன் பாப்பையா

சாலமன் பாப்பையா

எங்களுடைய பண்ணையில யாருமே அப்படி இல்லை, அப்படி வளர்ந்தவர்கள் நாங்கள் யாருமே அப்படி இல்லை. ஏன் இந்த தவறான கருத்து வந்தது, அதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம் வேறு இருக்கிறது என்பதைப் பார்க்கிறபோது, நட்பை விட பகைமை மேலோங்கி இருப்பதைக் காண்கிறேன். இது தமிழர்களுக்கு நல்லது அல்ல, தமிழ் வளர்ச்சிக்கு இது நல்லதும் அல்ல. அதனால் மிகப் பணிவாக உங்களிடம் கேட்கிறேன், எதுவாக இருந்தாலும் அவரிடம் நேரே கேட்டிருக்கலாம், அவரை திருத்தி இருக்கலாம். அந்தத் தாய் திருத்துவதற்கு பதிலாக இந்தப் பதிவை செய்து பகைமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களிடத்தில் என்னுடைய வருத்தத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜா அப்படிப்பட்டவர் அல்ல என்பதை மீண்டும் நான் உறுதிப்படுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *