“கட்சிக்கு வந்தபோது கொள்கைக்காகச் செயல்படும் கொள்கைவீரர் போல ராஜீவ் காந்தி இருந்தார். ஆனால் அடுத்த சிலமாதங்களிலேயே அவரின் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. ராஜீவ், இராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். அந்த மாவட்ட அமைச்சரும் இவரும் ஒரே சமூகம் என்பதால் அவரும் ஆரம்பத்தில் ராஜீவ் காந்திக்கு கேட்டதையெல்லாம் செய்து கொடுத்தார். ஒருகட்டத்தில் போக்குவரத்து துறையில் சத்தமில்லாமல் ராஜீவ் ஒரு ராஜ்யம் நடத்தும் அளவுக்கு செல்வாக்குடன் வலம்வந்தார்.
தி.மு.க-விற்காக பல்வேறு மேடைகளில் ஏறி களமாடி வந்தார். தலைமை கவனிக்கும் அளவுக்கு முக்கிய முகமாகவும் மாறிவந்தார். அதுவே அவருக்கு சிக்கலாகவும் மாற ஆரம்பித்தது.
போக்குவரத்து துறைக்கு புதிய அமைச்சர் வந்த பிறகு அவருடன் ராஜீவ் காந்தி இணைந்து போனார். இதற்குப் பின்னால் துணை முதல்வர் மற்றும் அன்பில் மகேஸ் ஆகிய இருவருடன் ராஜீவ் காந்தி காட்டிய நெருக்கமே இவரை பிற அமைச்சர்கள் மத்தியில் கடுமையாக லாபி செய்ய வைத்தது.
இவர் மனைவியின் ஊர் கோயம்புத்துார் என்பதால், தற்போது குடும்பத்துடன் கோவைக்கு குடிபெயர்ந்துள்ளார். அங்கு ஒரு தொகுதியில் போட்டியிடவும் ராஜீவ் காந்தி திட்டமிட்டார். கோவை மண்டலத்திற்கு பொறுப்பாளராக இருப்பவர் செந்தில் பாலாஜி. அவருடனே இவர் ஒரு கட்டத்தில் மோதல் போக்கைக் கையாண்டுள்ளார்.

எனக்கான தொகுதிகளை தலைமையிலிருந்தே வாங்கி வந்துவிடுவேன் என்று பந்தாவாகச் சொல்லிவந்துள்ளார்.
மற்றொருபுறம் கட்சியின் பெண் நிர்வாகிகள் சிலருக்கும் இரவு நேரத்தில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் வழியாக தேவையற்ற முறையில் மெசேஜ் செய்துவந்திருக்கிறார். அவர்கள் சொல்லிப் பார்த்தும், இவர் நிறுத்தவில்லை. அதையடுத்து அந்தப் பெண் நிர்வாகிகள், இந்த விவகாரம் குறித்து மேலிடத்துக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.
மற்றொருபுறம் செந்தில் பாலாஜியும் கோவையில் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார் ராஜீவ் காந்தி என்று, முதல்வர் காதில் விஷயத்தைப் போட்டுடைத்தார். சில அமைச்சர்கள், தேவையில்லாமல் பல டெண்டர் விவகாரங்களில் தலையிட்டு, தனக்கு வேண்டியவர்களுக்காக ராஜீவ் காந்தி மல்லுக்கட்டுகிறார் எனப் பற்றவைத்தனர்.