வாரிக்கட்டிய கோணக் கொண்டை, காதுகளில் ஆடும் தண்டட்டி, ஒனப்புத்தட்டு, புல்லாக்கு, எந்நேரமும் வெற்றிலையைக் குதப்பும் வாய், முதுமையும் துடிப்பும் கலந்த நடை, எத்தருணத்திலும் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத பேச்சு எனப் ‘பவுனுத்தாயி’ கதாபாத்திரத்திற்கு ரத்தமும் சதையுமாக உயிரூட்டியிருக்கிறார் ராதிகா. அவரின் இருத்தலே, அக்கதாபாத்திரத்தின் பாதி வேலையை முடித்துக்கொடுக்க, எமோஷன் காட்சிகளிலும் தன் அனுபவத்தால் திரையை ஆக்கிரமிக்கிறார்.
சுயநலமும், பேராசையும், ஆற்றாமையும் கலந்த மகன்களாக, காமெடி, எமோஷன் என இரண்டு ரோட்டிலும் கச்சிதமாக நடித்து, சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன் ஆகியோர் படத்தைத் தாங்குகிறார்கள்.
ஓடியோடி உதவும் சொந்தக்காரராக மூனீஸ்காந்த், ஆங்காங்கே காமெடிக்கு உதவியதோடு, திரைக்கதையின் நகர்விற்கும் உதவியிருக்கிறார். நிதானமான நடிப்பால் ரேச்சல் ரெபேக்கா, அடாவடி நடிப்பால் ‘வேட்டை’ முத்துக்குமார் தேவையான பங்களிப்பைச் செய்ய, ஜார்ஜ் மரியனும், இளவரசும் வந்து போகிறார்கள். மருமகள்கள் முத்துலட்சுமி, நிரோஷா, அபிநயா ஆகியோர் நடிப்பில் குறையில்லை.
பசுமையும், வெக்கையும் கலந்த விக்கிரமங்கலத்து நிலப்பரப்பை எதார்த்தமாகப் பதிவுசெய்ததோடு, சிறு குன்றுகள், ஊரணிகள், நாட்டார் கோயில்களையும் காட்சிகளின் சுவாரஸ்யத்திற்குப் பயன்படுத்திய விதத்தில் விவேக் விஜயகுமாரின் ஒளிப்பதிவு அட்டகாசம் செய்ய, அதற்குப் படத்தொகுப்பாளர் சான் லோகேஷும் கைகொடுத்திருக்கிறார்.