ராமேசுவரம் மீனவர்கள் 7-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம்: ரூ.15 கோடி வருவாய் இழப்பு | Rameswaram fishermen on strike for 7th day

1373380
Spread the love

ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் இன்று 7வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரத்திலிருந்து கடந்த ஆகஸ்ட் 9 அன்று கடலுக்குச் சென்ற டல்லஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகினை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி படகை சிறைப்பிடித்து, படகிலிருந்த 7 மீனவர்களை கைது செய்தனர்.

மேலும் கடந்த இரண்டு மாதங்களில் 64 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆறு மாதம், ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று 24 மீனவர்கள் தண்டனை கைதிகளாக உள்ளனர்.

இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை விடுதலை செய்ய வேண்டும், இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு காணவும், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை பெற்ற தர மத்திய, மாநில அரசுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 11 அன்று காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தொடங்கினர். மேலும் கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தினர்.

இன்று 7-வது நாளாக ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் ராமேசுவரத்தில் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடி இறங்குதளத்தில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிடப்பட்டிருந்தது. மேலும் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கும் செல்லவில்லை. இதனால் சுமார் 15 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வா்த்தக இழப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 19 அன்று ராமேசுவரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதாகவும் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *