சென்னை: தமிழக தொழில் துறை சார்பில் ரூ.190 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவுப் பூங்காக்கள், சட்டத் துறை சார்பில் ரூ.54.67 கோடியில் கட்டப்பட்ட கல்விசார் கட்டிடங்கள், சமூகநலத் துறை சார்பில் ரூ.43.88 லட்சத்தில் திருநங்கைகளுக்காக அமைக்கப்பட்ட அரண் இல்லங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக தொழில் துறை சார்பில் தேர்வாய்கண்டிகை, வல்லம் வடகால், சிறுசேரி, கும்மிடிப்பூண்டி, கடலூர், பர்கூர், பெருந்துறை, தூத்துக்குடி, நிலக்கோட்டை, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, மானா மதுரை, ஒரகடம், பிள்ளைப்பாக்கம், ஓசூர், கங்கைகொண்டான் ஆகிய 16 தொழில் பூங்காக்களில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் காப்பகங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கொள்ளார், பெலாகுப்பம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி 157.91 ஏக்கரில் ரூ.120 கோடியில் அமைக்கப்பட்டுள்ள திண்டிவனம் மெகா உணவு பூங்கா, தேனி மாவட்டம் உப்பார்பட்டி, தப்புகுண்டு, பூமலைகுண்டு ஆகிய கிராமங்களை உள்ளடக்கி 123.49 ஏக்கரில் ரூ.70 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தேனிமெகா உணவுப் பூங்காவையும் முதல்வர் திறந்து வைத்தார்.
சட்டத் துறை சார்பில் மதுரை அரசு சட்டக் கல்லூரிக்காக தல்லாகுளம் தங்கராஜ் சாலையில் 1.35 லட்சம் சதுரஅடி பரப்பில் ரூ.48.20 கோடியில் கட்டப்பட்டுள்ள கல்விசார் மற்றும் நிர்வாக தொகுதி கட்டிடங்கள், வேலூர் அரசு சட்டக் கல்லூரிக்காக காட்பாடி வட்டம் காந்தி நகரில் 20 ஆயிரம் சதுரஅடி பரப்பில் ரூ.6.47 கோடியில் தரை மற்றும் 2 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டிடம் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.
சமூகம், மனநலம், பாதுகாப்பு தொடர்பாக திருநங்கைகள் எதிர்நோக்கும் சவால்களை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு பாதுகாப்பான, மதிப்பு, மரியாதை நிறைந்த, ஆதரவான வாழ்விடச்சூழலை உருவாக்கும் நோக்கில்,சமூகநலத் துறை சார்பில் ‘அரண்இல்லம்’ எனும் சிறப்பு மையங்களை அமைக்க தீர்மானிக்கப்பட்டது. முதல்கட்டமாக, சென்னை ஷெனாய் நகர், மதுரை அண்ணா நகரில் ரூ.43.88 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள அரண் இல்லங்களை திறந்து வைத்தார். இந்த நிகழ்வுகளில் அமைச்சர்கள் துரைமுருகன், கீதா ஜீவன், டிஆர்பி. ராஜா, தலைமைச் செயலர் நா.முருகானந்தம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்