சென்டிமெண்ட், ஆக்ஷன், காமெடி என்ற வழக்கமான பாதையில் நமக்கு நன்கு பரிச்சயமான ஜி.வி.பிரகாஷே வந்து போகிறார். ஓரிரு இடங்களில் கட்டுப்பாட்டை மீறி அவிழ்த்துக் கொண்டு ஓடும் செயற்கைத்தனங்களைத் தவிர்த்திருக்கலாம்.
நாயகி அனஸ்வரா ராஜனுக்கு நடிப்பில் குறிப்பிடும்படியான வேலை தரப்படாததால், நம் மனதில் இடம் பிடிக்காமலேயே தப்பி ஓடிவிடுகிறார். சுப்பு பஞ்சு அவருக்கெனத் தைக்கப்பட்ட காமெடி அளவுச்சட்டையை அணிந்திருக்கிறார். ஆனால், சட்டையில் ஜொலிப்பு இல்லை!
கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை தேவதர்ஷினி பொறுப்பாகக் கரைசேர்க்க, குழந்தை நட்சத்திரம் மேக்னா சுமேஷும் நடிப்பில் நல்லதொரு பங்களிப்பைத் தந்திருக்கிறார்.

மேலும், டேனியல் ஆனி போப், ஆடுகளம் நரேன், இளங்கோ குமரவேல், மதுசூதன் ராவ், நமோ நாராயணா ஆகியோருக்கு ஓரிரு காமெடிகளை நிகழ்த்தும் வேலை மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது.
இவர்களைத் தாண்டி நாய்களுக்குப் பின்னணி குரல் தந்திருக்கும் கோவை சரளா, ‘மொட்டை’ ராஜேந்திரன், தம்பி ராமையா ஆகியோரின் பணி காமெடி என்றாலும் சோதிக்கவே செய்திருக்கிறது.