என்.ஆர். ரகுநந்தன், சித்தார்த் விபின் கூட்டணியின் இசையில், பாடல்கள் ஈர்க்கவுமில்லாமல், தொந்தரவும் செய்யாமல் கடந்து போகின்றன. ஆனால், த்ரில்லருக்கான எரிபொருளை ஊற்றி, இரண்டாம் பாதியை முடுக்கிவிட்டிருக்கிறது இக்கூட்டணி.
மிடில் க்ளாஸ் குடும்பம், கட்டுக்கோப்பான பெற்றோர், வேலை தேடும் படலம், காதல் தொல்லைகள் என நிதானமாக, புதுமையே இல்லாத காட்சிகளால் தொடங்கும் திரைக்கதை, முதல் பாதியின் பெரும் பாதியைக் கடந்த பிறகுதான் மையக்கதையையே தொடுகிறது.
வழக்கமான காட்சிகளே வரிசைக்கட்டி வந்தாலும், நடிகர்களின் பங்களிப்பு அவற்றை ஓரளவிற்குக் காப்பாற்றுகிறது. இடைவேளைக்குப் பிறகு விறுவிறுவெனப் பற்றும் திரைக்கதை, பரபரப்பைக் கச்சிதமாகக் கடத்துகிறது.

அனுபமாவின் மனப்போராட்டம், கொரோனா லாக் டவுன், சட்டவிரோத கருக்கலைப்பு கும்பல்கள் எனக் காட்சிகள் திக் திக்கென நகர்ந்தாலும், சிறிது நேரத்திலேயே அதீத சாகசங்களை நோக்கி அனுபமா கதாபாத்திரம் நகர்கிறது. அதுவரை இரக்கத்தைச் சம்பாதித்து வைத்திருந்த அக்கதாபாத்திரம், ஒருகட்டத்தில் பார்வையாளர்களிடமிருந்து விலகிவிடுகிறது.