வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் சட்டமாக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது.
மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, 655 பக்க அறிக்கையை தயாரித்தது. இதில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, இந்த மசோதாவை மக்களவையிலும் மாநிலங்களவையில் இந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா மீதான விவாதத்தில் இரு அவைகளிலும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தனர்.
இருப்பினும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் இரு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசு அனுப்பியிருந்தது.
இந்த நிலையில், வக்ஃப் சட்டத் திருத்தங்களுக்கு குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல் அளித்ததாக மத்திய சட்டத்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ளது.
மக்களவை
ஆதரவு – 288
எதிர்ப்பு – 232
மாநிலங்களவை
ஆதரவு – 128
எதிர்ப்பு – 95
