மத்தியபிரதேச மாநிலம் போபால் அசோக்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சன். இவருடைய மனைவி முஸ்கா. இவர்களுக்கு 3 வயது சாரா என்ற குழந்தை உள்ளது.
இவர்கள் நாகர்கோவில் கோட்டார் சவேரியார் தேவாலய திருவிழாவிற்கு பலூன் விற்பனை செய்ய குடும்பத்துடன் வந்துள்ளனர். திருவிழா முடிந்த பின்னர் மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல, நேற்று மாலை குடும்பத்துடன் நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு ஆட்டோவில் சென்றனர்.
ரயில் நிலையத்துக்குச் சென்றதும் ஆட்டோ டிரைவர் மூன்று வயது குழந்தை சாராவுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பதாக கூறி, குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஞ்சன் கோட்டார் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் தலைமையில் நான்கு தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ டிரைவர் குழந்தையை தூக்கிச் செல்லும் காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதற்கிடையே, குழந்தையை ஆட்டோ டிரைவர் தூக்கிச் செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சியை மையமாகக் கொண்டு விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், குழந்தையை நாகர்கோவில் அருகே உள்ள இறச்சக்குளம் காட்டுப் பகுதிக்குள் இருந்து பாதுகாப்பாக மீட்டனர்.
பின்னர் குழந்தை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பெற்றோருக்கு ஒப்படைக்கப்பட்டது.