சென்னை: வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றும் அளவுக்கு டிச.17-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் அமைய வேண்டும் என்று பாமக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று பாமக தலைவர் அன்புமணி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்: நமக்கே உரித்தான கற்களும், முட்களும் நிறைந்த சமூகநீதியை நோக்கிய இன்னொரு போராட்டப் பாதையில் பயணத்தை தொடங்கியிருக்கிறோம். தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு குறைந்தது 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் டிச.17-ம் தேதி தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த இருக்கிறோம்.
திமுக அரசின் இந்த சமூகநீதி நம்பிக்கைத் துரோகங்கள், மோசடிகள், பித்தலாட்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். அத்துடன் நமது இடஒதுக்கீட்டு கோரிக்கையையும் வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் டிச.17-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டை நிறைவேற்றும் அளவுக்கு சிறை நிரப்பும் போராட்டம் அமைய வேண்டும். போராட்டக் களத்தில் உங்களுடன் கைக்கோர்த்து போராடுவதற்கான நாளுக்காக காத்து கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.