வயநாடு: `மக்கள் தவறாக நினைப்பார்கள்; தள்ளி நில்லுங்கள்' – மம்மூட்டி, CPM மா.செ இடையே நடந்தது என்ன?

Spread the love

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மல பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி உருள்பொட்டல் எனப்படும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர். நூற்றுக்கணக்கான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. முண்டக்கை, சூரல்மல நிலச்சரிவில் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடு கட்டிகொடுக்கும் மாடல் டவுண்ஷிப் திட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது.

சுமார் 64 ஹெக்டேர் நிலத்தில் ஒரு குடும்பத்துக்கு 7 செண்ட் நிலத்தில் ஆயிரம் சதுர அடி அளவுள்ள வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தின்படி மூன்று கட்டங்களாக 402 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

கல்பெட்டா-வில் உள்ள எல்ஸ்டன் எஸ்டேட்டில் நடைபெறும் டவுண்ஷிப் பணிகளை கடந்த 7-ம் தேதி திடீரென பார்வையிடச் சென்றார் நடிகர் மம்மூட்டி. ஒரு படபிடிப்புக்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில் டவுண்ஷிப்புக்குச் சென்ற அவருடன் சினிமா தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் சென்றிருந்தார். டவுண்ஷிப்பை சுமார் 15 நிமிடங்கள் சுற்றிபார்த்தவரிடம் தலைமை இயக்க அதிகாரி ஜோ.அருன், சமூக நலக்கூடம் அமைக்கும் இடம், மக்களுக்கு செய்யப்படும் வசதிகள் போன்றவற்றை விளக்கிக் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களிடமும் மம்மூட்டி பேசியதுடன், கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளையும் பார்வையிட்டார்.

நடிகர் மம்மூட்டியுடன் வயநாடு சி.பி.எம் மாவட்டச்செயலாளர் கே.ரஃபீக்

டவுண்ஷிப்பை பார்வையிட்டுவிட்டு திரும்பும்போது நடிகர் மம்மூட்டி கூறுகையில், “இதுபோன்ற திட்டங்கள் அரிதாகவே நடக்கும். துயரத்தில் உள்ள, ஆபத்தில் சிக்கிய மக்களுக்கு ஒரு நாட்டின் மக்கள் ஒன்றிணைந்து நன்கொடையாக அளித்ததுதான் இந்த டவுண்ஷிப். கேரள மக்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தை அரசு வழங்குகிறது. மக்களின் மனங்களை இதன் மூலம் பார்க்கிறேன். சமூகத்தின் மூலதனமாகத்தான் இதை பார்க்கிறேன். மற்றவர்கள் மீதான இரக்கமும், அனுதாபமும் கேரளாவில் மிக அதிகமாக உள்ளது. அதற்கு இதுவே மிகப்பெரிய உதாரணம்” என்றார்.

வயநாட்டில் புதிய டவுண்ஷிப்பை பார்வையிட்ட நடிகர் மம்மூட்டி

இதற்கிடையே மம்மூட்டி டவுண்ஷிப்பை பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது சி.பி.எம்  வயநாடு மாவட்டச் செயலாளர் கே.ரஃபீக் அவருடன் சென்றுகொண்டே மீடியாவுக்கு போஸ்கொடுத்துக் கொண்டிருந்தார். தேர்தல் சமயத்தில் இது அரசியல் நிகழ்வாக திசைதிரும்பிவிடக்கூடாது என நினைத்த மம்மூட்டி, “நீங்கள் எப்போதும் என்னுடன் வந்துகொண்டிருந்தால், நான் உங்களுக்காக இங்கு வந்ததாக மக்கள் தவறாகப் புரிந்துகொள்ளமாட்டார்களா. எனவே தள்ளி நில்லுங்கள்” எனக்கூறினார்.

அந்த உரையால் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. சி.பி.எம் நிர்வாகிகள் மம்மூட்டிக்கு பொது இடத்தில் எப்படி செயல்பட வேண்டும் என தெரியவில்லை என்பதுபோன்ற எதிரான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

அதே சமயம் அரசியல் சார்பற்ற நடிகர் மம்மூட்டி அவ்வாறு கூறியதில் தவறு இல்லை என மற்தொரு சாராரும் கூறிவருகின்றனர். மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மம்மூட்டியை ஆதரித்து பதிவிடுவதால் இது அரசியல் விவாதமாக மாறி உள்ளது. இதற்கிடையே இது தனிப்பட்ட உரையாடல். அதை சில வலதுசாரி ஊடகங்கள் தவறாக சித்திரித்துவிட்டன என கே.ரஃபிக் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *