“மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் ‘ என்ற பெயரில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை நடைபெற உள்ள பயண கூட்டங்களில் தொண்டர்கள் மத்தியில் பங்கேற்க இருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக அந்த பகுதிகளில் ஃபிளக்ஸ் பேனர்களை வைத்திருக்கிறார்கள். இன்று மாலை எடப்பாடி பழனிசாமி அந்தியூர் வரவுள்ள நிலையில், பல பகுதிகளிலும் ஃபிளக்ஸ் பேனர்களை அடையாளம் தெரியாத நபர்கள் கிழித்துச் சென்றிருக்கிறார்கள். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அ.தி.மு.க நிர்வாகிகள், காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர், “அந்தியூர் அருகில் உள்ள அத்தாணி கைகாட்டி பிரிவு, காட்டூர் மேடு, கருவாடடிப்புதூர், கீழ்வாணி, ஆப்பக்கூடல் உள்ளிட்ட முக்கிய சாலையோரங்களில் அ.தி.மு.க சார்பில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இதனை விரும்பாத நபர்கள் சிலர் இரவோடு இரவாக இந்த பேனர்களை கிழித்துச் சென்றிருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர் .