வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை வாய்ப்பு: வானிலை மையம் தகவல் | Chance of rain today and tomorrow

Spread the love

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: வடக்கு ஆந்திர – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா மற்றும் அதையொட்டிய வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் அடுத்த 2 நாட்களில் கடந்து செல்லக்கூடும்.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவற்றின் தாக்கத்தால் இன்றும், நாளையும் தமிழகத்தின் ஒரிரு இடங்களில், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். இதேபோல், அதிகபட்ச வெப்பநிலை 37.4 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கக் கூடும்.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மர்றும் அதையொட்டிய குமரிக் கடல், ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு – வடமேற்கு வங்கக் கடல், தென்மேற்கு வங்கக் கடலின் சில பகுதிகள், தென்மேற்கு – மத்திய மேற்கு அரபிக் கடலின் சில பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று அதிகபட்சமாக மணிக்கு 65 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.

தென்மேற்கு பருவமழை வடதமிழக கடலோர மாவட்டங்களில் தீவிரமாக இருந்தது. குறிப்பாக தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் முஷ்ணத்தில் 11 செமீமழை பதிவானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *