“வளைகுடா நாடுகளை தாக்கமாட்டோம்”- ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் அறிவிப்பு ! – Kumudam

Spread the love

ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தச் சூழலில், அண்டை நாடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்காக ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

அண்டை நாடுகளிலிருந்து ஈரான் மீது நேரடித் தாக்குதல் நடத்தப்படாத வரை, அந்த நாடுகளை இலக்காகக் கொண்டு இனி தாக்குதல் நடத்தப்படாது என்று அதிபர் பெசஷ்கியான் உறுதியளித்துள்ளார். ஈரானின் இடைக்காலத் தலைமை கவுன்சில் இந்த முடிவிற்கு நேற்று ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதன் மூலம் அண்டை நாடுகள் மீதான பதற்றம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அண்டை நாடுகளிடம் மென்மையான போக்கைக் கடைப்பிடித்தாலும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடம் ஈரான் ஒருபோதும் சரணடையாது என்று அதிபர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். “ஈரான் மக்கள் சரணடைய வேண்டும் என்ற எதிரிகளின் ஆசை அவர்களின் கல்லறைகளுக்கே செல்லும்” என்று அரசு தொலைக்காட்சியில் அவர் ஆவேசமாகப் உரையாற்றினார். 

ஈரான் அதிபரின் அறிவிப்பு ஒருபுறம் இருந்தாலும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதல் ஈரானில் தொடர்ந்து நீடிக்கிறது. இன்று தலைநகர் தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் சர்வதேச விமான நிலையம் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. இதுவரை இந்த மோதலில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தொடக்கப்பள்ளி ஒன்று இலக்கானதில் 160 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *