வாகன ஓட்டிகளுக்கு கசப்பு செய்தி : பெட்ரோல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு! – Kumudam

Spread the love

ஈரான் மீதான போர் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றின் பின்னணியில், இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ப்ரீமியம் பெட்ரோல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன. ஏற்கனவே எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில், இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், பிபிசிஎல் நிறுவனத்தின் ‘ஸ்பீட்’, ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் ‘பவர்’ மற்றும் ஐஓசிஎல் நிறுவனத்தின் ‘எக்ஸ்பி95’ ஆகிய ப்ரீமியம் பெட்ரோல் வகைகளின் விலை லிட்டருக்கு 2.09 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக 111.68 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் ப்ரீமியம் பெட்ரோல், இந்த உயர்வுக்குப் பின் தற்போது 113.77 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாற்றத்தைத் தொடர்ந்து லக்னோவில் 103.92 ரூபாய்க்கும், புனேவில் 113.17 ரூபாய்க்கும் ப்ரீமியம் பெட்ரோல் விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 110 டாலரைத் தாண்டி, தற்போது 118 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் மூன்றாவது வாரமாக நீடிப்பதும், போர் விரைவில் முடிவுக்கு வராது என்ற சூழலும் இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போர் முடிவுக்கு வரும் என்று கூறி வந்தாலும், ஈரானின் பதிலடித் தாக்குதல்கள் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளன.

ப்ரீமியம் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சாதாரண பெட்ரோல் விலையும் எந்த நேரத்திலும் உயர்த்தப்படலாம் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. மத்திய அரசு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அதே வேளையில், சர்வதேசப் போர்ச் சூழல் இந்தியாவின் எரிபொருள் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *