வாட்ஸ்அப், டெலிகிராம் முடக்கம்.. புதிய செயலியை அறிமுகம் செய்யும் அரசு! – Kumudam

Spread the love

உலகப்புகழ் பெற்ற தகவல் தொடர்புச் செயலிகளான வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் ஆகியவற்றின் மீது கடும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது ரஷ்யா. அந்நாட்டின் சட்டங்களுக்குப் புறம்பான தகவல்களை நீக்க மறுப்பது மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இந்த முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் ‘வீசாட்’ (WeChat) பாணியில், ரஷ்யா ‘மேக்ஸ்’ (MAX) என்ற புதிய சூப்பர் ஆப்-ஐ உருவாக்கியுள்ளது. இதில் வீடியோ கால், ஆடியோ கால் மற்றும் பணப்பரிவர்த்தனை போன்ற வசதிகளுடன் அரசுச் சேவைகளையும் பெற முடியும். இந்தச் செயலியை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காகவே, மற்ற வெளிநாட்டுச் செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், இனி ரஷ்யாவில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் ‘மேக்ஸ்’ செயலி ஏற்கனவே பதிவேற்றம் (Pre-installed) செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தத் தடையை மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் கடுமையாகச் சாடியுள்ளது. “10 கோடிக்கும் அதிகமான பயனர்களைத் தனிமைப்படுத்தும் இந்தப் போக்கு, மக்களின் பாதுகாப்பான தகவல் தொடர்பைப் பாதிக்கும்; இது ஒரு பிற்போக்குத்தனமான செயல்” என்று வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதேபோல், டெலிகிராம் நிறுவனர் பவெல் துரோவ் இந்த நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ரஷ்ய அரசின் இந்தச் செயல், பயனர்களை அரசுக்குச் சொந்தமான ஒரு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரும் முயற்சி என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘மேக்ஸ்’ செயலி மூலம் மக்களின் அந்தரங்க உரையாடல்களை அரசு கண்காணிக்கக்கூடும் என்று சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை வலுப்படுத்துவதே தங்கள் நோக்கம் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *