வானிலை முன்னறிவிப்பு: நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு | Tamilnadu Weather update

1372164
Spread the love

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இவை காரணமாக நாளை (ஆக.7) மற்றும் நாளை மறுநாள் வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 9-ம் தேதி ஒருசில இடங்களிலும், 10 முதல் 12-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நாளை கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 8-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 9-ம் தேதி விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் 12 செமீ, சிவங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 10 செமீ, திருப்புவனம், ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆகிய இடங்களில் தலா 8 செமீ, மதுரை மாவட்டம் இடையப்பட்டியில் 7 செமீ, ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல், தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஆகிய இடங்களில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *