வானிலை முன்னெச்சரிக்கை: சென்னை, திருவள்ளூர், செங்கை, காஞ்சி, ராணிப்பேட்டைக்கு கனமழை வாய்ப்பு | Heavy rain in 5 districts including Chennai tomorrow Chance of rain

1380557
Spread the love

சென்னை: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை (அக்.23) கனமழை இருக்கும் என்றும், வரும் 27-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பி.அமுதா வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவுகிறது. இது நாளை (அக். 23) வட தமிழகம் – புதுச்சேரி – தெற்கு ஆந்திர கடலாரப் பகுதிகளை கடந்து செல்லக்கூடும்.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, வடக்கு – வட மேற்கு திசையில் நாளை நகர்ந்து செல்லக்கூடும்.

மேலும், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவை காரணமாக, தமிழகத்தில் நாளை முதல் 27-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், 24-ம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும், 26, 27 தேதிகளில் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும், 27-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக, புதுச்சேரி காலாப்பட்டில் 25 செமீ, புதுச்சேரி நகரத்தில் 21 செமீ, புதுச்சேரி பாகூரில் 19 செமீ, விழுப்புரம் மாவட்டம் வானூர், கடலூரில் தலா 18 செமீ, விழுப்புரம், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரி, கடலூர் மாவட்டம் வனமாதேவியில் 17 செமீ, புதுச்சேரி பத்துக்கண்ணு, திருக்கனூர், கடலூர் மாவட்டம் குடிதாங்கியில் தலா 15 செமீ மழை பதிவாகியுள்ளது’ இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *