சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 20 காக்கிகளை மாற்றியிருக்கிறது தமிழக அரசு. ‘மீசை’ மாண்புமிகுவுக்கு சிக்கல் நெருங்கும் நிலையில், அவர் சம்பந்தப்பட்ட வழக்கைக் கையாள்வதற்காகவே, உயரதிகாரி ஒருவரை சம்பந்தப்பட்ட துறைக்கு மாற்றியிருக்கிறார்களாம். அவர் ‘ஆசீர்வாத’மே மாண்புமிகுவைக் காக்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்த மாறுதல் நடந்துள்ளது.
காலியாக இருந்த மலைக்கோட்டை ஏரியாவுக்கு ‘சோழ மன்னர்’ பெயர்கொண்ட அதிகாரியை பணியமர்த்தியிருக்கின்றனர். இதனால், அந்த ஏரியாவை எதிர்பார்த்திருந்த வெள்ளை மாளிகையின் உளவுப்பிரிவு அதிகாரி டோட்டல் அப்செட்டாம்.
‘குயின்’ மாவட்ட மாண்புமிகுவுடன் முரண்பாட்டிலிருந்த பெண் அதிகாரி, அல்வா மாவட்ட மணியான அதிகாரி எனப் பல காக்கிகளும் தேர்தலைக் காரணம் காட்டி தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில், நீண்டகாலம் காத்திருப்பில் இருந்த உயரதிகாரிக்கும் ஒரு பணியிடம் அளிக்கப்பட்டிருக்கிறது. ‘தேர்தல் தேதி அறிவிப்பு முன்னதாக இன்னொரு லிஸ்ட் வெளியாகும்’ என்று தகவல்கள் கூறுவதால், காக்கிகள் மத்தியில் பரபரப்பு அடங்கவில்லை.